கேரள மாநில அரசு பஸ்களை சாலை ஓரங்களில் நிறுத்த அறிவுரை
பந்தலுார்; 'பந்தலுார் வழியாக வந்து செல்லும் கேரளா மாநில அரசு பஸ்கள், சாலை ஓரப்பகுதியில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பந்தலுார் வழியாக கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா மாநில அரசு பஸ் சென்று வருகிறது. அதில், பெரும்பாலான பஸ்கள் வன விலங்குகள் வந்து செல்லும், வாகன நிற்கும் இடங்களில் பஸ்களை நிறுத்தாமல் செல்வதுடன், பந்தலுார் உள்ளிட்ட பஜார் பகுதிகளில் சாலையின் நடுவில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றனர். இதனால், ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து, தமிழக அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர், கேரளா மாநில அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம், 'பஸ்களை சாலை ஓரங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டும். பஸ் நிறுத்தும் இடங்களில் அனைத்து கேரள மாநில அரசு பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும்,' என, அறிவுறுத்தி உள்ளார். இதனால்,அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்குதீர்வு காணப்பட்டது.