உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மலை மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் நஷ்டம் அதிகரிப்பு! மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமா மாநில அரசு?

மலை மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் நஷ்டம் அதிகரிப்பு! மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமா மாநில அரசு?

ஊட்டி; நீலகிரி மாவட்ட அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயக்கி வருவதால் மக்களுக்கான பஸ் சேவையில் தொய்வு ஏற்பட்டு வருகிறது. ஊட்டி அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் மற்றும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட கிளைகளை உள்ளடக்கி பஸ் சேவை நடந்து வருகிறது. 270 வழித்தடத்தில், 320 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதில், வெளி மாவட்டம் மற்றும் கேரளா, பெங்களூரு உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. சேவை அடிப்படையில் இயக்கம் மலை மாவட்ட போக்குவரத்து கழகம் கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்து செலவினம், பராமரிப்பு பணி, நிதி பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. பஸ்களின் அன்றாட பராமரிப்பு பணிகளுக்கு, 'பிரேக் லைனர், டிரம், ஸ்பிரிங்கட், ஸ்பேர் டயர்,' உள்ளிட்டவைகளில் பராமரிப்பு குறைபாடுகள் அதிகளவில் உள்ளன. பஸ்களின் குறைபாட்டை அலுவலகத்தில் வைக்கப்பட்ட பதிவேட்டில் எழுதி தெரிவித்தாலும், மாத கணக்கில் சரி செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனினும், அதிகாரிகளின் நிர்பந்தத்தால் வேறு வழியின்றி டிரைவர், கண்டக்டர்கள் பஸ்களை இயக்கி வருகின்றனர். 60 சதவீதம் புதிய பஸ்கள், 20 சதவீதம் பழைய பஸ்களை புதுபித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு இயக்கப்பட்டு வருகின்றன. அதில், மலை பாதையில் இயக்கப்பட்டு வரும் பெரும்பாலான பஸ்களில், இழுவை திறன் குறைப்பாடால் கூடுதல் நேரம் பயணிக்க வேண்டிய நிலை உள்ளதால், பயணியர் பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், 'மலை மாவட்டத்தை பொறுத்த வரை, கடந்த பல ஆண்டுகளாக, சேவை அடிப்படையில் தான் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, நஷ்டத்தில் இயங்கி வருவது உண்மைதான். பஸ்களின் அன்றாட பராமரிப்புக்கான பொருட்களை அவ்வப்போது வாங்கி சமாளித்து வருகிறோம். மேலதிகாரிகளுக்கு இங்குள்ள நிலைமை தெரியும். பஸ்களை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின் றன,'' என்றனர்.

ரூ. 428 கோடி நஷ்டம்...

இங்குள்ள அரசு போக்குவரத்து கழக பஸ்களுக்கு தினசரி, 30 ஆயிரம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. அதில், 'சிறிய பஸ்கள், பெரிய பஸ்கள்' என, வழித்தடத்திற்கு ஏற்ப எரிபொருள் நிரப்பப்படுகிறது. கடந்த, 5 ஆண்டுகளுக்கு முன்பு, அரசு பஸ்களை தினசரி, 1.80 லட்சம் பயணியர் பயன்படுத்தி வந்தனர். தற்போது, 1.50 லட்சமாக குறைந்துள்ளது. வழித்தட குறைப்பு, மினி பஸ்கள், தனியார் வாகனங்கள் அதிகரிப்பு, சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் சொந்த வாகனங்களில் வருகை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள், பஸ் பயணிகள் குறைய காரணிகளாக அமைந்துள்ளன. மேலும், 'மலை மாவட்டம் போக்குவரத்து கழகம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், கடந்த, 20 ஆண்டுகளில், 428 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இது வரும் ஆண்டுகளில் அதிகரிக்க வாய்ப்புள்ளது' என, போக்குவரத்து கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை