நிலச்சரிவு அபாய பகுதியில் வாழும் மக்களுக்கு புதிய வீடுகள்!; ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டு பணி துவக்கம்
கூடலுார்: கூடலுார் அருகே ஓவேலி ஆத்துார், சீபுரம் பகுதியில் நில்சரிவு அபாயத்தில் வசிக்கும் மக்களுக்கு, 7.4 ஏக்கர் பரப்பில் புதிய வீடுகள் கட்டும் பணி துவக்கப் பட்டது. கூடலுார் ஓவேலி பேரூராட்சி, ஆத்துார் பகுதியில், 114 குடும்பங்கள் சாலை உள்ளிட்ட போதுமான அடிப்படை வசதிகள் இன்றியும், வனவிலங்குகள் அச்சத்தில் வசித்து வந்தனர். பருவமழையின் போது மண்சரிவு ஏற்படுவதால், புவியியல் துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். ஆய்வில், 'இப்பகுதியில் மக்கள் வசிக்கும் அளவுக்கு பாதுகாப்பு இல்லை,' என, தெரிவித்தனர். இதனால், அவர்களுக்கு, கூடலுார் ஸ்ரீமதுரை ஊராட்சி வடவயல் பகுதியில், 2020- 21 நிதி ஆண்டில் மாற்றிடம் வழங்கப்பட்டது. அங்கு வீடு கட்டுவதற்காக, அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் தலா, 2.10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. அதில், 44 பேர் வீடுகள் கட்டி வருகின்றனர். மீதமுள்ளவர்கள், 'வீடு கட்டுவதற்கான தொகை போதுமானதாக இல்லை' என, கூறி, தொடர்ந்து ஆத்துார் பகுதியில் ஆபத்தான பகுதியில் வசித்து வருகின்றனர். அரசு விழாவில் அறிவிப்பு இந்நிலையில், கடந்த ஏப்., மாதம் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற மாநில முதல்வர் ஸ்டாலின், 'கூடலுார் பகுதியில், 26.6 கோடி ரூபாய் செலவில், 300 வீடுகளுடன் 'கலைஞர் நகர்' அமைக்கப்படும். அதனை வீடில்லாத மக்களுக்கு வழங்கப்படும்,' என, தெரிவித்திருந்தார். தொடர்ந்து அதற்கான நடவடிக்கையை வருவாய்த்துறை மேற்கொண்டனர். அதன்படி, கூடலுார் ஸ்ரீமதுரை ஊராட்சி வடவயல் பகுதியில், தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த, 7.4 ஏக்கர் அரசு நிலத்தை வருவாய் துறையினர் மீட்டு, கலைஞர் நகர் அமைப்பதற்காக கூடலுார் ஊராட்சி ஒன்றியத்திடம் ஒப்படைத்தனர் முதற்கட்டமாக 200 வீடுகள் இப்பகுதியில், முதல் கட்டமாக, அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய, 6 லட்சம் ரூபாய் மதிப்பில், 200 வீடுகள் கட்டுவதற்கு அரசு, 18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சில்வர் ஓக், ரப்பர் மரங்கள் வெட்டி அகற்றும் பணியை மேற்கொண்டுள்ளனர். இப்பணி முடிந்தவுடன் இடத்தை சமன்படுத்தப்பட்டு, வீடுகள் கட்டும் பணியை துவங்க உள்ளனர். கூடலுார் வட்டார வளர்ச்சி அலுவலர் சலீம் கூறுகையில், ''வடவயல் பகுதியில் கலைஞர் நகரம் அமைப்பதற்கு வருவாய் துறை சார்பில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் உள்ள, 590 சில்வர் ஓக், 61 ரப்பர் மரங்களை பசுமைக் குழுவின் அனுமதி பெற்று, அரசு விதிமுறைக்கு உட்பட்டு ஏலம் விடப்பட்டு வெட்டப்படுகிறது. அதில் எந்த முறைகேடும் இல்லை. மேலும், இடம் ஒதுக்குவதில் ஓவேலி ஆத்துார், சீபுரம் பகுதி மக்களில் வீடு இல்லாதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்,'' என்றார்.