உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரி சுற்றுலா தலங்கள் கன மழையால் மூடல்

நீலகிரி சுற்றுலா தலங்கள் கன மழையால் மூடல்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக அவலாஞ்சியில், 21.5 செ.மீ., மழை பதிவானது.அப்பர் பவானி, எமரால்டு, கூடலுார், பந்தலுார் பகுதிகளில், 10 செ.மீ.,க்கு மேல் மழை பதிவானது. மழைக்கு, ஊட்டி, குன்னுார், கூடலுார், பந்தலுார் பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு மீட்புக்குழு, நெடுஞ்சாலைத் துறையினர் சம்பவ பகுதிக்கு உடனுக்குடன் அகற்றி வருகின்றனர். இந்நிலையில், தோட்டக்கலை துறைக்கு சொந்தமான ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, டீ பார்க், மரவியல் பூங்காக்கள் நேற்று மதியம் திடீரென மூடப்பட்டன. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கூடலுார் ஊசி மலை மூடப்பட்டது. சுற்றுலா பயணியர் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.அமைச்சர் சாமிநாதன் கூறுகையில், ''நீலகிரியில் மழை தொடர்வதால் முன்னெச்சரிக்கையாக பெரும்பாலான சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ''தேசிய, மாநில பேரிடர் குழுவினர் மழை பாதிப்பு பகுதிகளில் தயார் நிலையில் உள்ளனர். இதுவரை, 26 குடும்பங்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்,'' என்றார்.

மரம் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

ஊட்டிக்கு சுற்றுலா வந்த கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியை சேர்ந்த சிலர் பைன் பாரஸ்ட் பகுதிக்கு சென்றனர். அப்போது மரக்கிளை விழுந்ததில் ஆதிதேவ், 15, என்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.சிறுவன் உடல் மீட்கப்பட்டு, ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சென்ற அமைச்சர் சாமிநாதன் சிறுவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !