சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள பழைய வாகனங்கள்: போக்குவரத்துக்கு இடையூறு
கூடலுார் : கூடலுார் நந்தட்டி அருகே, கோழிக்கோடு சாலையோர பகுதி, பழைய வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறியுள்ளதால், வாகன போக்குவரத்துக்கும், மக்கள் நடந்து செல்லவும் இடையூறு ஏற்பட்டுள்ளது.கூடலுார் நந்தட்டி பகுதியில், கோழிக்கோடு பகுதிக்கு செல்லும் சாலையோரம் தனியார் பணி மனைகள் செயல்பட்டு வருகிறது. அதில் சிலர், வாகனங்களை சாலையில் நிறுத்தி, பழுது பார்க்கும் பணியை மேற்கொள்வதால் வாகன போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது.மேலும், இங்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள இருசக்கர வாகனங்கள்; நான்கு சக்கர வாகனங்களை நிரந்தரமாக சிலர் நிறுத்தி சென்றுள்ளனர். அந்த வாகனங்களை சுற்றிலும், செடிகள் வளர்ந்துள்ளதுடன், பாம்பு, விஷ ஜந்துக்களின் வாழ்விடமாகவும் இப்பகுதி மாறியுள்ளது. இந்த வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை இல்லாததால், சாலையோரம் பழைய வாகனங்கள் நிறுத்தப்படுவது அதிகரித்து, வாகன போக்குவரத்துக்கும், மக்கள் சாலையோரம் நடந்து செல்லவும் சிரமப்பட்டு வருகின்றனர்.சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'இப்பகுதி சாலையின் இருபுறமும், நிறுத்தப்பட்டுள்ள பழைய வாகனங்களால், சாலை ஓரங்களில் மக்கள் நடந்து செல்ல கூட இடமில்லை. வாகன விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள பழைய வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்தவும், மீண்டும் பழைய வாகனங்களை நிறுத்துவதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.