உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இயற்கை முறை காய்கறி விதை நேர்த்தியால் அதிக மகசூல் பெற வாய்ப்பு! விவசாயிகளுக்கு வேளாண் துறை விழிப்புணர்வு

இயற்கை முறை காய்கறி விதை நேர்த்தியால் அதிக மகசூல் பெற வாய்ப்பு! விவசாயிகளுக்கு வேளாண் துறை விழிப்புணர்வு

ஊட்டி: 'இயற்கை முறையில் காய்கறி விதைகளை விதை நேர்த்தி செய்வதால் நோய்களை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறலாம்,' என, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில், 65 ஆயிரம் ஏக்கரில் தேயிலை சாகுபடி, 25 ஆயிரம் ஏக்கரில் மலை காய்கறிகள் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், 'கார்போகம், கடைபோகம், நீர்போகம்,' என, மூன்று பருவங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. தோட்டக்கலை துறையினர் மலை காய்கறி விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு திட்டங்கள் குறித்து கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இயற்கை முறையில் விதை நேர்த்தி செய்தால் சாகுபடி அதிகரிக்கலாம். நீர், திரவ விதை நேர்த்தி விதைகளை தண்ணீரை கொண்டு, இரு முறைகளில் விதை நேர்த்தி செய்யலாம். முதலாவதாக, விதைகளை நீரில், 8 முதல் 12 மணி நேரம் ஊரவைப்பதன் வாயிலாக விதையின் காரணிகள் துாண்டப்பட்டு முளைப்புத்திறன் வேகம் எடுத்து, அனைத்து விதைகளும் சீராக முளைக்கும். இரண்டாவதாக, 55 டிகிரி செல்சியஸ் வெப்பம் உள்ள நீரில், 20 முதல் 30 நிமிடம் விதைகளை ஊரவைப்பதால், விதைகளின் மேல் பரப்பிலும், அடியிலும் இருக்கும் நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் அழிக்கப்பட்டு விதைகளில் பரவக்கூடிய நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்த முறையில் விதை நேர்த்தி செய்யும்போது நீரின் வெப்பம், 55 டிகிரி செல்சியஸ் மிகாமல் இருப்பது அவசியம், இல்லையேல் அதிக வெப்பத்தின் காரணமாக விதைகள் சேதமடைந்து முளைப்புத்திறன் பாதிக்கப்படும். மூன்று நாட்கள் நன்கு புளித்த மோரில் விதைகளை நன்றாக கலந்து, 30 நிமிடம் ஊரவைத்து பின் நிழலில் உலர்த்தி விதைப்பதால் விதைகள் சீராகவும் வீரியமாகவும் முளைக்கும். மேலும், 2 சதவீதம் ஜீவாமிர்தம் அல்லது பஞ்ச காவியாவுடன், 6 மணி நேரம் ஊரவைத்து விதைப்பதன் மூலம் பயிர்களின் நோய் எதிர்ப்பு திறன் துாண்டப்பட்டு சீராக முளைப்பது கண்டறியப்பட்டு உள்ளது. உயிரியல் சார்ந்த விதை உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளான, 'ட்ரைக்கோடெர்மா மற்றும் சூடோமோனாஸ் ப்லோரசன்ஸ் அல்லது பேசிலஸ் சப்டிலீஸ்' ஆகியவற்றை, 1 கிலோ விதைக்கு தலா, 4 கிராம் வீதம் நன்றாக கலந்து விதைப்பதால் பயிர்களை தாக்க கூடிய நோய்களை நீண்டகாலம் கட்டுப்படுத்தலாம். மேலும், உயிர் உரமான 'அசோஸ்பைரில்லம்' ஒரு எக்டர் விதைக்கு, 600 கிராம் என்ற வீதம் வடிகட்டி ஆர வைத்த கஞ்சியுடன் கலந்து, 30 நிமிடம் ஊரவைத்து நிழலில் உலர்த்தி விதைப்பதால் யூரியா இடுவதை குறைக்கலாம். உயிரியல் விதை நேர்த்தி செய்த விதைகளுக்கு ரசாயன விதை நேர்த்தி செய்யக்ககூடாது. விதை பரிசோதனை அலுவலர் நவீன் கூறியதாவது,''நீலகிரியில் பிரதானமாக பயிரிடப்படும் காய்கறி விதைகளை இயற்கை முறையில் விதை நேர்த்தி செய்வதால் நோய்களை கட்டுப்படுத்தி விதைகளின் தரத்தை உயர்த்த முடியும். மேலும், நஞ்சில்லாமல் அதிக மகசூல் பெற்று விவசாயகள் பயன் பெறலாம். விதை நேர்த்தி வாயிலாக தரமான விதைகள் கிடைப்பதால் இடுபொருள் செலவு குறையும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை