நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட்! முன்னெச்சரிக்கை பணி தீவிரம்; கண்காணிப்பில் 42 மண்டல குழுக்கள்
ஊட்டி, ; நீலகிரி மாவட்டத்துக்கு ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, 42 மண்டல குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது. அதில், ஊட்டி, கூடலுார், பந்தலுார் பகுதியில் கன மழை பெய்தது. தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் அந்தந்த பகுதிகளில் உள்ள வருவாய் துறையினரை உஷார் படுத்தியுள்ளனர். அதில், அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய,283 பகுதிகளை கண்காணிக்க, 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். மேலும், நீலகிரியில், 3,600 முதல் நிலை பொறுப்பாளர்கள், 200 தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். 'பொதுமக்கள் தங்களது பகுதிகளில் பேரிடர் பாதிப்பு இருந்தால் வருவாய் துறையினரை அணுகி, அந்தந்த பகுதியில் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் தங்கலாம்,'என, அறிவுறுத்தியுள்ளனர். காலை முதல் மாலை வரை மழை தொடர்ந்ததால் சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணிகள் குறைவாக காணப்பட்டனர். கடும் குளிரான காலநிலை நிலவுகிறது.