நடைபாதையில் குழிகள்; தடுக்கி விழும் மக்கள்
கோத்தகிரி,; கோத்தகிரி கட்டபெட்டு பஜாரில் இருந்து 'பவர் ஹவுஸ்' செல்லும் நடைபாதை குழிகள் ஏற்பட்டு, சேதம் அடைந்துள்ளதால் மக்கள் தடுக்கி விழுந்து வருகின்றனர். கோத்தகிரி கட்டபெட்டு பஜார், கக்குச்சி நடுஹட்டி ஊராட்சிகள் மற்றும் ஜெகதளா பேரூராட்சியின் எல்லையாக அமைந்துள்ளது. கிராமப்புறங்களில் இருந்து, நகர பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானால், கட்டபெட்டு பஜாரை கடந்து சென்றுவர வேண்டும். ஜெகதளா பேரூராட்சிக்கு உட்பட்ட இந்த நடைபாதையை நாள்தோறும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உட்பட நுாற்றுக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறனர். தவிர, இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால், குடிமகன்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், நடைபாதையின் நடுவே, பல இடங்களில் குழிகள் ஏற்பட்டுள்ளன. இதனால், நடந்து சென்று வருவோர் தடுக்கி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக, முதியோர் மற்றும் நோயாளிகள் அதிக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, ஜெகதளா பேரூராட்சி நிர்வாகம், நடைபாதையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.