குந்தா தாலுகாவில் அரசு கல்லுாரி அமைக்க மனு
குன்னுார்; 'குன்னுார் பகுதிக்கு அறிவிக்கப்பட்ட, அரசு கலை கல்லுாரியை குந்தா பகுதியில் அமைக்க அரசு பரிசீலிக்க வேண்டும்,' என, லஞ்சம் இல்லாத நீலகிரி அமைப்பு வலியுறுத்தியுள்ளது.லஞ்சம் இல்லா நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பிய மனு: நீலகிரி மாவட்டத்தில், அரசு கலை கல்லுாரி அமைக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவித்ததுவரவேற்கத்தக்கது.ஊட்டியில் உள்ள அரசு கலை கல்லுாரிக்கு குன்னுார், ஊட்டி, குந்தா, கோத்தகிரி தாலுகாவில் இருந்து மாணவ, மாணவியர் சென்று பயின்று வருகின்றனர். கோத்தகிரியில் தனியார் கலை கல்லுாரி, குன்னூரில் ஆயிரம் பேர் பயின்று வரும், அரசு உதவிபெறும் தனியார் மகளிர் கல்லுாரி ஆகியவை உள்ளன.ஆனால், குந்தா பகுதியில் கல்லுாரி இல்லை. கிண்ணக்கொரை, கோர குந்தாஉட்பட சுற்றுப்புற பகுதிகளில் உள்ளவர்கள், 40 கி.மீ., தொலைவில் உள்ள ஊட்டி அரசு கலை கல்லுாரிக்கு வந்து படிக்க வேண்டும். தேயிலை தோட்ட தொழிலாளர்கள்,சிறு குறு விவசாயிகள், பூர்வகுடிகள், ஆதிவாசிகள் அதிகம் வாழ்ந்து வரும் குந்தாவில், அரசு கலை கல்லுாரி அமையுமானால் அந்த பகுதி மக்களுடைய வாழ்க்கை தரம் மேம்படும். குந்தா பகுதியில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அதிகம் உள்ளன.இப்பகுதியில் ஏராளமான பெண் குழந்தைகள் தொலைவில் உள்ள கல்லுாரிக்கு சென்று படிக்க இயலாமல்,தங்கள் கல்வி கற்கும் உரிமையை இழந்துள்ளனர்.எனவே, குன்னுார் பகுதிக்கு அறிவிக்கப்பட்ட, அரசு கலைக் கல்லுாரியை குந்தா பகுதியில் அமைக்க அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு மனோகரன் கூறியுள்ளார்.