நீலகிரியில் 821 மையங்களில் போலியோ சொட்டு மருந்து
ஊட்டி: ஊட்டி காந்தள் அங்கன்வாடி மையத்தில், தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் முகாமை தொடங்கி வைத்து, சொட்டு மருந்து வினியோகிப்பதை பார்வையிட்டார். தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் சத்துணவு மையங்களில் நடைபெற்றது. மேலும், பணி நிமித்தமாக இடம் பெயர்ந்த மக்கள் வசிக்கும் பகுதிகள், குடிசை பகுதிகள் என, 821 மையங்களில் ஐந்து வயதிற்கு உட்பட்ட, 44,140 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வினியோகிக்கப்பட்டது. இப்பணியில், 3,284 பணியாளர்கள் ஈடுபட்டனர். முகாமில், நீலகிரி மாவட்டத்தை போலியோ இல்லாத சமுதாயத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில், சுகாதார பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம், ஊட்டி நகர் நல அலுவலர் சிபி, ஊட்டி வட்டார மருத்துவ அலுவலர் முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.