பூமாலை வணிக வளாக தரைதளம் மழையில் சேதம்
ஊட்டி; ஊட்டியில் உள்ள பூமாலை வணிக வளாக தரை தளம் மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஊட்டி சேரிங்கராஸ் பகுதியில், அரசு கலை கல்லுாரிக்கு செல்லும் சாலையில், மகளிர் சுய உதவி குழுக்கள் ஒருங்கிணைந்து கடைகள் நடத்தி வருகின்றனர். இதில், இயறக்கைக்கு உகந்த பாரம்பரியமிக்க தானிய வகை உணவு வகைகள், 10 க்கும் மேற்பட்ட கடைகளில், மிகுந்த சுவையுடன், குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. முழுக்க, மகளிர் நடத்தும் இக்கடைகளை சுற்றுலா பயணிகள், கல்லுாரி மாணவர்கள் உட்பட, பொது மக்கள் நாடி செல்கின்றனர். இந்த வணிக வளாகத்தின் தரைத்தளம், சமீபத்தில் பெய்த மழையில் இறங்கி குழி ஏற்பட்டுள்ளது. இதனால், அருகில் உள்ள சுற்றச்சுவரும் சேதம் அடைந்துள்ளது. எதிர்வரும் நாட்களில் மழை தீவிரமடையும் பட்சத்தில், மீண்டும் குழி ஏற்பட்டு, கட்டத்திற்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம், தண்ணீர் தேங்காதவாறு குழியை சமன் செய்து, பெயர்ந்துள்ள 'இன்டர்லாக்' கற்களை சீராக பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.