சாலையோரம் கொட்டப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்; தினமலர் செய்தி எதிரொலி
கூடலுார்; கூடலுார், இரும்புபாலம் பகுதியில் கோழிக்கோடு சாலையோரம் வீசப்பட்ட 'பிளாஸ்டிக்' கழிவுகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க, 21 வகையான பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்களை விற்பனை செய்யவும்; பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு துறையினர் அடிக்கடி கடைகளில் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள், தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.கூடலுார் பகுதியில், தமிழக -கேரளா எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில், வெளி மாநில சுற்றுலா பயணிகள் எடுத்து வரும் பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனர். எனினும், முழுமையாக தடுக்க முடியவில்லை.இந்நிலையில், நாடுகாணி வழியாக நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களுக்கு தேவையான உணவை எடுத்து வந்து, கோழிக்கோடு சாலையோரங்களில் அமர்ந்து உட்கொண்ட பின், அவர்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் தட்டுகள், தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்களை சாலையோரம் வீசி செல்கின்றனர்.அதில், இரும்புபாலம் பகுதியில், பாண்டியார் -புன்னம்புழா ஆற்றை ஒட்டிய கோழிக்கோடு சாலையோரம், சுற்றுலா பயணிகள் வீசி சென்ற பிளாஸ்டிக் கழிவுகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் குவிந்து கிடக்கின்றன. இவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், ஆற்றின் குறுக்கே, குடிநீருக்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை நீர் மாசடைய காரணமாக உள்ளன. மேலும், அப்பகுதிக்கு தண்ணீர் குடிக்க வரும் வன விலங்குகள், உணவு கழிவுகளுடன் காணப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உட்கொண்டு பாதிப்படையும் ஆபத்தும் உள்ளது.இது தொடர்பாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து, கூடலுார் நகராட்சி கமிஷனர் சுவீதாஸ்ரீ நெல்லியாளம் நகராட்சி கமிஷனர் முனியப்பன் ஆகியோர் உத்தரப்படி, நெல்லியாளம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் அறிவழகன், சுகாதார மேற்பார்வையாளர் ஆறுமுகம் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் ஆற்றை ஒட்டி சாலையோரம் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றி சுத்தம் செய்தனர். அப்பகுதியில் வனத்துறை ஊழியர்களும் ஆய்வு செய்தனர்.அதிகாரிகள் கூறுகையில், இந்த பகுதியில், குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க விழிப்புணர்வுடன் கூடிய அறிவிப்பு பலகை வைக்கப்படும். இப்பகுதியில் சாலையோரம் திறந்தவெளியில் குப்பை கொட்டு வோர் மீது அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.