நீரோடையை தடுத்ததால் சிக்கல் தீர்வு கண்ட வருவாய் துறையினர்
கூடலுார்: கூடலுார் கோகால் அருகே தனிநபர் நீரோடையை தடுத்து, சொந்த பயனுக்கு பயன்படுத்தி வந்த நிலையில், அதனை வருவாய் துறையினர் அகற்றினர். கூடலுார் கோக்கால் பகுதியில் உற்பத்தியாகும் நீரோடையில் வரும், தண்ணீரை அப்பகுதியை சேர்ந்த குடும்பங்கள் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கு பயன்படுத்தி வந்தனர். சமீப காலமாக நீரோடையில் தண்ணீர் வரத்து நின்றுவிட்டது. இதனால், அப்பகுதியினர் தண்ணீர் கிடைக்காமல் சிரமப்பட்டனர். இந்நிலையில், அங்குள்ள தனிநபர், நீரோடையை மறித்து, தண்ணீரை சொந்த பயனுக்கு பயன்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்து வருவாய் துறையில் புகார் அளித்தனர். கூடலுார் வருவாய் ஆய்வாளர் ராம்குமார், கிராம நிர்வாக அலுவலர் மோகன் ஆகியோர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, தடுப்புகளை அகற்றி, நீரோடை நீர் வழக்கம் போல செல்லும் வழியில் திருப்பி விட்டனர். இதனால், மக்கள் நிம்மதி அடைந்தனர்.