சாலை வசதியில்லாத கிளன்ராக் கிராமம்: எஸ்.ஐ.ஆர்., முகாம் நடத்துவதில் சிக்கல்
பந்தலுார்: பந்தலுார் அருகே, சாலை, வாகன வசதி இல்லாத கிளன்ராக் பழங்குடியின கிராமத்தில், எஸ்.ஐ.ஆர்., சிறப்பு முகாம் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பந்தலுார் பஜாரில் இருந்து, 12 கி.மீ. தொலைவில் உள்ள கிளன்ராக் பழங்குடியின கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு செல்ல சாலை மற்றும் வாகன வசதி இல்லை. இதனால் இந்த கிராம மக்கள், வனப்பகுதியில் நடந்து வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது, தேர்தல் நேரங்களில் நடந்து வந்து, தங்கள் வாக்குரிமையை செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், தற்போது எஸ்.ஐ.ஆர்., விண்ணப்பங்கள் வழங்கப்படும் நிலையில், இந்த கிராமத்திற்கு ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வனவிலங்குகள் அச்சத்தில் நடந்து சென்று விண்ணப்பங்களை வழங்க செல்ல முடியாத நிலை உள்ளது. பழங்குடியினர் கூறுகையில்,'தங்கள் கிராமத்தில் சிறப்பு முகாம் நடத்தி, விண்ணப்பங்களை வழங்கி, விபரங்களை பூர்த்தி செய்து சென்றால், தங்களுக்கு பயனாக இருக்கும். தேர்தலின் போது தவறாமல் ஓட்டளிப்போம்,' என்றனர்.