தேயிலை செடிகளை வெயிலில் இருந்து பாதுகாக்க ஸ்பிரிங்ளர் தண்ணீர்
கூடலுார்: கூடலுார் பகுதியில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தேயிலை செடிகளை பாதுகாக்க 'ஸ்பிரிங்ளர்' மூலம், தண்ணீர் பாய்ச்சும் பணியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.கூடலுார், பந்தலுார் பகுதியில் கடந்த ஆண்டு, எதிர்பார்த்ததை விட பருவ மழை பெய்தது. இதனால், வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தடையின்றி கிடைத்தது. பருவமழையை தொடர்ந்து பனி பொழிவின் தாக்கம் அதிகரித்ததால், தாவரங்கள், செடிகள் பசுமை இழந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டங்கள், சிறு விவசாய தோட்டங்களில் பசுந்தேயிலை மகசூல், பாதிப்பு ஏற்பட்டு வருவாய் இழப்பு ஏற்பட துவங்கி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வெயிலின் தாக்கத்திலிருந்து தேயிலை செடிகளை பாதுகாக்க, தேயிலை தோட்டங்களில் 'ஸ்பிரிங்ளர்' மூலம், தினமும் இருமுறை தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். விவசாயிகள் கூறுகையில், 'பனிப்பொழிவை தொடர்ந்து, எதிர்பார்த்த கோடை மழை பெய்யாததால், தேயிலை செடிகளில் மகசூல் பாதிப்பட்டு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சிறு விவசாயிகள், இதற்கும் வழி இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். கோடை மழை பெய்தால் மட்டுமே இதற்கு தீர்வாகும். எனவே, பாதிக்கப்பட்டுள்ள சிறு விவசாயிகளுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும்,' என்றனர்.