ஆர்டிஐ சட்ட மனு மீது ஒரு மாதத்திற்குள் பதில் அளிக்க அறிவுறுத்தல்: மாநில தகவல் ஆணையர் அறிவுறுத்தல்
ஊட்டி: 'தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுதாரர்கள் அளிக்கும் மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் அளிக்காத பொது தகவல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என, மாநில தகவல் ஆணையர் அறிவுறுத்தி உள்ளார். நீலகிரி மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம்--2005 தொடர்பாக, அனைத்து துறை அலுவலர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம், ஊட்டியில் நடந்தது. மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா முன்னிலை வகித்தார். மாநில தகவல் ஆணையர்கள் பிரியகுமார், இளம்பரிதி மற்றும் நடேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். முகாமில், தமிழ்நாடு தகவல் அறியும் உரிமை சட்ட தகவல் ஆணையர் பிரியகுமார் பேசியதாவது: இன்றைய காலத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பொதுமக்களிடையே அதிக அளவில் விழிப்புணர்வு உள்ளது. முன்பு குறைவான அளவு மனுக்கள் மட்டுமே தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டது. ஆனால், தற்போது பல்வேறு துறைகளிலிருந்து அதிக அளவில் மனுக்கள் பெறப்படுகிறது. துறை அலுவலர்கள் பராமரிப்பு பதிவேட்டில் மனு பெறப்பட்ட நாள்; மனு பதிவு செய்யப்பட்ட நாள்; மனுவின் மீது தீர்வு கண்ட நாள், மனுதாரருக்கு தகவல் வழங்கிய நாள் ஆகியவற்றை பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். மனுதாரர்களிடம் இருந்து வரும் மனுக்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ள பொது தகவல் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் மனுக்கள் மீது பதில் அளிக்காத பொது தகவல் அலுவலர் மீது நடடிக்கை மேற்கொள்ள வேண்டிய வழிவகை சட்டத்தில் உள்ளது. எனவே, மனுதாரர் அளிக்கும் மனுவை நன்றாக படித்து சரியான பதிலை மனுதாரருக்கு, 30 நாட்களுக்குள் தகவல் தர வேண்டும். நீங்கள் அளிக்கும் பதில்கள் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சதீஸ்குமார் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.