அரசு மருத்துவமனையாக மாறும் டான் டீ பழைய அலுவலகம்
பந்தலுார்; பந்தலுார் அருகே செயல்பட்டு வந்த சேரம்பாடி 'டான்டீ' கோட்ட அலுவலகம், சிக்கோனா பகுதிக்கு மாற்றப்பட்டது.பந்தலுார் அருகே சேரம்பாடி அரசு தோட்ட நிறுவனமான, டான்டீ கோட்ட அலுவலகம், சரக எண்-1-க்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வந்தது. அங்கு செல்வதற்கு வாகன வசதி இல்லாத நிலையிலும், யானை உள்ளிட்ட வனவிலங்கு பிரச்னையாலும், எலியாஸ் கடை அருகே செயல்பட்டு வந்த கார்டன் மருத்துவமனை, கடந்த பல ஆண்டுகளாக கோட்ட அலுவலகமாக மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்த கட்டடம் அரசு மருத்துவமனையாக மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில், கோட்ட அலுவலகம், சின்கோனா பகுதி குடியிருப்புக்கு மாற்றப்பட்டுள்ளது. பாழடைந்து காணப்பட்ட அந்த கட்டடம் தற்போது பொலிவுபடுத்தப்பட்டு அலுவலகமாக செயல்பட துவங்கியுள்ளதால், கார்டன் மருத்துவமனை விரைவில், அரசு பொது மருத்துவமனையாக செயல்பட வாய்ப்புள்ளது.