வாகனங்கள் நிறுத்த இடமில்லை; குழியை மூடினால் பயன் நிச்சயம்
கோத்தகிரி; கோத்தகிரி போலீஸ் குடியிருப்பு பகுதியில் உள்ள குழியை மூடினால், வாகனங்களை நிறுத்தும் வகையில் 'பார்க்கிங்' தளத்தை உருவாக்க முடியும். கோத்தகிரி பேரூராட்சி, சமீபத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகரப்பகுதியில், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. குறிப்பாக, வாகனங்கள் நிறுத்த இடவசதி இல்லை. இதனால், கிராமப்புறங்களில் இருந்து நகரப்பகுதிக்கு பல்வேறு தேவைகளுக்காக வரும் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்த முடியாத நிலை உள்ளது. சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. தவிர, போலீசார் விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். இந்நிலையில், நகரப்பகுதியில், போலீஸ் குடியிருப்பு பகுதியில் பெரிய குழி மூடப்படாமல் உள்ளது. தண்ணீர் வழிந்தோட, சிறிய கால்வாய் அமைத்து, குழியை மூடி சமன் செய்யும் பட்சத்தில், 15 வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு 'பார்க்கிங்' தளத்தை அமைக்க முடியும். எனவே, கோத்தகிரி நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.