கழிவுகள் செல்ல வழி இல்லை; பாதிக்கப்பட்டுள்ள சுகாதாரம்
பந்தலுார்; பந்தலுார் காலனி மற்றும் ஹட்டி பகுதிகளில், கழிவு நீர் செல்ல வழி இல்லாததால் சுகாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பந்தலூர் காலனி மற்றும் ஹட்டி கிராமங்கள் அமைந்துள்ளது. இங்குள்ள குடியிருப்புகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல அமைக்கப்பட்ட கால்வாய்கள், புதர் சூழ்ந்து கழிவுகள் வழிந்து ஓட வழி இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.மேலும், இந்த வழியாக செல்லும் சிறிய நீரோடையில் குடியிருப்பு வாசிகள், பல்வேறு கழிவு பொருட்களை வீசி உள்ளதால், கழிவு பொருட்கள் நிறைந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.மக்கள் கூறுகையில், 'இதனை முறையாக சீரமைத்து கழிவு நீர் வழிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், வியாபாரிகள் குப்பை கழிவுகளை நீரோடை மற்றும் கால்வாய்களில் போட தடை விதிக்கவும், நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும். இல்லாதபட்சத்தில், தொற்று நோய் பரவலை, தடுக்க முடியாத நிலை ஏற்படும்,' என்றனர்.