மஞ்சூரில் புலி நடமாட்டம்கிராம மக்கள் அச்சம்
ஊட்டி,; மஞ்சூர் அருகே குந்தா சாலையில் புலி உலா வந்ததால் மக்கள் பீதி அடைந்துள்ளனர் . மஞ்சூர் அருகே குந்தா நீர்மின் நிலையம் மின்வாரிய ஊழியர்கள் குடியிருப்பு அதன் அருகே பாக்கோரை கிராமம் உள்ளது. இந்த பகுதியை சுற்றி ஏராளமான தேயிலை தோட்டங்கள் மற்றும் வனப்பகுதிகள் உள்ளன. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் புலி ஒன்று மின்வாரிய பகுதிக்கு வந்தது பின் அங்கிருந்து குந்தா சாலையை கடக்க முயன்றது. அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தை கண்ட புலி வாகனத்தின் முகப்பு விளக்கின் வெளிச்சத்தை பார்த்தவுடன் அசராமல் நின்றது. மீண்டும் சாலையில் நடந்து கொண்டை ஊசி வளைவை கடந்து பின்னர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதனால், குந்தா பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். அப்பகுதியை ஆய்வு செய்த வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.வனத்துறையினர் கூறுகையில், 'புலி நடமாட்ட காரணமாக பொதுமக்கள்; வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும்,' என்றனர்.