சுற்றுலா மாவட்டம்: பயணிகள் திண்டாட்டம்!
நீலகிரி மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில், ஊட்டி- -குன்னுார் சாலை; ஊட்டி-- கோத்தகிரி; ஊட்டி- மஞ்சூர்; குன்னுார் - மஞ்சூர்; கூடலுார்- மைசூர்; மேட்டுப்பாளையம்-- குன்னுார்; பந்தலுார்- -சுல்தான்பத்தேரி சாலை,' என, 1,170 கி.மீ., துார சாலை உள்ளது. அதில், பர்லியார்- கக்கனல்லா வரை, 108 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலைகள்; சிறு பாலங்கள்; மழை நீர் வடிகால்கள் பராமரிக்கப்படுகின்றன. தென் மேற்கு, வடகிழக்கு பருவமழை போன்ற இயற்கை பேரிடர்களின் போது சாலை போக்குவரத்தை சீராக வைத்திருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதை தவிர, தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் சேதம்; பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து, மாநில நெடுஞ்சாலை துறையின் ஒத்துழைப்புடன், இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள், நிதி ஒதுக்கீட்டை பொறுத்து சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக, சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மலை மாவட்ட சாலைகளில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டு, உள்ளூர் வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் வந்து செல்வதில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. 35 லட்சம் சுற்றுலா பயணிகள் ஆண்டுக்கு, 35 லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கு வரும் நிலையில், நுழைவு வரி; பசுமை வரி கொடுத்து வரும் தனியார் வாகனங்கள், மலை பாதைகளில் சாலை சேதம் ஏற்பட்ட பகுதிகளில் செல்லும் போது, தடம் மாறும் கட்டாயம் ஏற்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் சில வாகனங்கள் பள்ளத்தில் உருண்டு விபத்துக்கு உள்ளாகும் நிலையும் தொடர்கிறது. சாலை சேதம் அடைந்த சில பகுதிகளில், தற்காலிக பணிகளை மேற்கொள்ளும் நெடுஞ்சாலையினர், சுற்றுலா மாவட்டத்தின் முக்கியத்துவம் கருதி, தரமான முறையில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பது, உள்ளூர் மக்கள்; சுற்றுலா வாகன ஓட்டுனர்களின் கோரிக்கையாக உள்ளது. முன்று மாநில சந்திப்பில் சிரமம் இந்நிலையில், 3 மாநிலங்களை இணைக்கும், கூடலுார், பந்தலுார் சாலைகளில், பெரும்பாலான பகுதிகள் மிகவும் சேதமடைந்து வாகனங்கள் இயக்க முடியாத நிலையில் காணப்படுகிறது. இதனால், இவ்வழியாக ஆண்டுதோறும் வரும், கர்நாடகா, கேரளா உட்பட பிற பகுதிகளின் சுற்றுலா வாகனங்கள் பெரும் சிரமப்பட்டு, பயணிகளின் அதிருப்தி அடையும் சூழ்நிலை அதிகரித்து வருகிறது. மேலும், உள்ளூரில் அவசர தேவைகளுக்கு கூட ஆம்புலன்ஸ் வாகனங்கள் நோயாளிகளை கொண்டு செல்ல முடியாத நிலை தொடர்கிறது. ஒவ்வொரு முறையும் வி.ஐ.பி.,க்கள் வரும் போது மட்டும், குறிப்பிட்ட இடங்களில் தற்காலிக பணிகளை மேற்கொள்ளும் நெடுஞ்சாலை துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள், உள்ளூர் மக்கள் நிம்மதியாக பயணிக்க தரமான சாலை பணிகள் மேற்கொள்வதில், ஆர்வம் காட்டுவதில்லை. --பந்தலுார் பந்தலுார் குந்தலாடி, உப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளில் இருந்து, கேரளா மாநிலம் வயநாடு; தமிழக எல்லை பகுதியான பாட்டவயல்; அய்யன்கொல்லி, நம்பியார்குன்னு மற்றும் நெலாக்கோட்டை, கூடலுார் பகுதிகளுக்கு செல்லும் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் குந்தலாடி மற்றும் பெக்கி ஆகிய இடங்களில், பெரும் சேதம் ஏற்பட்டு குழியாக மாறி உள்ளது. மேலும், சாலையின் நடுவில் உள்ள சிறுபாலம் சேதமடையும் நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க உள்ளூர் மக்கள் வலியுறுத்தியும் மழையை காரணம் காட்டி பணியில் தாமதம் ஏற்படுத்தப்படுகிறது. கூடலுார், செம்பாலா பகுதியில் இருந்து திருவள்ளுவர் நகர், ஈட்டி மூலா, ஆனசெத்தகொல்லி வழியாக செல்லும் சாலை, முதல் மைல் அருகே தேவர்சோலை சாலையுடன் இணைகிறது. இச் சாலையை அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, கேரளாவில் மலப்புரம் -வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி சென்று வரவும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பெய்து வரும் பருவமழையில், மழைநீர்குளம் போல் தேங்கி, சாலை மேலும் சேதமடைந்து வருகிறது. அதில், வாகனங்கள் இயக்க ஓட்டுனர்கள் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் கூறுகையில், ''நீலகிரி மாவட்டத்தில் மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில், 1,170 கி.மீ., சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. சாலைகளில் ஏற்படும் சேதத்தை அவ்வப்போது சீரமைத்து, சீரான போக்குவரத்துக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மலைப்பகுதி என்பதால், 80 சதவீதம் சாலைகளில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூடலுார், பந்தலுார் உட்பட பிற இடங்களில், மீதமுள்ள பகுதிகளை ஆய்வு செய்து, மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
எல்லையில் வரி வசூல் செய்தும் பயனில்லை
கூடலுார் சுற்றுலா வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுனர் சசிகுமார் கூறுகையில், ''நீலகிரிக்கு வரும், வெளிமாநில வாகனங்களுக்கு, கேரளா எல்லையில் வாகன நுழைவு வரி வசூல் செய்யப்படுகிறது. ஊட்டி சாலை, தெப்பக்காடு சாலை, மசினகுடி பகுதியில் சோதனை சாவடி அமைத்து, பசுமை வரி வசூல் செய்து வருகின்றனர். ஆனால், வெளி மாநில சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இச்சாலையில் பல இடங்களில் சேதமடைந்துள்ளது. அதனை பராமரிக்கவோ, நிரந்தரமாக, சீரமைக்கவோ நடவடிக்கை எடுப்பதில்லை. சேதமடைந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலையோர கால்வாயில் அடைப்பு
கோத்தகிரி சமூக ஆர்வலர் லோகநாதன் கூறுகையில், ''கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், சாலை மிக நேர்த்தியாக சீரமைக்கப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் சாலை விரிவுபடுத்தப்பட்டு, மழை நீர் வழிந்தோட ஏதுவாக, கால்வாய்கள், பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளன. இதில், பல இடங்களில் சாலை தடுப்புச் சுவர் இடிந்து காட்டு செடிகள் அதிகரித்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மழை நாட்களில் மழை நீர் சாலையின் மேல் ஓடுவதால், சாலை சேதமடைகிறது. இப்பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.
பணிகளை விரைந்து முடிக்கணும்
ஊட்டி 'டிராவல்ஸ் மேக்சிகேப் ஓனர்ஸ் அசோசியேஷன்' செயலாளர் நித்தின் சேகர் கூறுகையில், ''மலை மாவட்டத்தை பொறுத்தவரை சாலைகள் நன்றாக இருந்தால்தான் வாகனங்களை பிரச்னை இல்லாமல் இயக்க முடியும். சுற்றுலா நகரம் என்பதால் ஆண்டு முழுவதும் பிற மாநில மற்றும் தமிழகத்தில் பிற மாவட்டங்களிலிருந்து வாகனங்கள் வந்து செல்கிறது. பர்லியார் சாலைகளில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதால் சாலையில் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கூடலுார் சுற்றுப்புற பகுதிகளில் நடந்து வரும் சாலை பணியை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
தரமான முறையில் பணி அவசியம்
குன்னுார் வாகன ஓட்டுனர் ரமேஷ், கூறுகையில், ''குன்னுார்- - ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் சில இடங்கள், படிகள் போன்று மேடு பள்ளமுமாக காட்சியளிக்கிறது. கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளை ஆம்புலன்ஸ் உட்பட மற்ற வாகனங்களில் இந்த சாலை வழியாக அழைத்து செல்வதில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. சுற்றுலா வாகனங்களில் வருவோர், சாலையின் மேடுபள்ளத்தை கண்டு, திடீரென பிரேக் பிடிப்பதால், பின்புறம் வரும் வாகனங்கள் இந்த வாகனத்தின் மீது மோதி விபத்தும் ஏற்படுகிறது. மழைநீர் கால்வாய் அமைத்த இடங்கள் மிகவும் உயரமாக செப்பனிடப்பட்டு உள்ளது. குழிகளால் வாகனங்களும் அடிக்கடி பழுதடைந்து வருகிறது. சாலையோர மழை நீர் கால்வாய்களை சரி செய்து தரமான முறையில் செப்பனிட வேண்டும்,'' என்றார்.
பொது நல வழக்கு தொடருவோம்...
சமூக ஆர்வலர் வர்கீஸ் கூறுகையில், ''சாலைகளை சீரமைக்கும் முன், நிலத்தின் தன்மையை ஆய்வு செய்து, அந்த மண்ணிற்கு ஏற்ற வகையில், தரமாக சீரமைக்க வேண்டும். அதிகாரிகள் நிதி ஒதுக்கீடு செய்த பின்னர், 'கமிஷன்' வாங்குவதை தவிர்த்து பணி மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். சேதமான சாலைகளை சீரமைப்பதற்கு பதில், ஒப்பந்ததாரர் வசதிக்கேற்ப, நல்ல நிலையில் உள்ள சாலைகளை சீரமைப்பது தவறு. இதே நிலை தொடர்ந்தால், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மீது பொது நல வழக்கு தொடரப்படும்,'' என்றார்.
குப்பை கொட்டும்இடமாக மாறியது
குன்னுார் பஜார் தெருவில் வசிக்கும் கோபி கூறுகையில், ''குன்னூர் மவுன்ட் சாலையோரம் உள்ள கழிவுநீர் கால்வாய், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சரி செய்யப்படாமல் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கருங்கல் தடுப்பு சுவர் இடிக்கப்பட்டு சரி செய்யப்படவில்லை. இப்பகுதி குப்பை கொட்டும் இடமாக மாறியது. இதனால், இப்பகுதியில் சாலை சேதமடையும் அபாயம் உள்ளது. ஆங்கிலேயரால் அமைக்கப்பட்ட இந்த கால்வாய் அடைப்புகளை, அசோக மரத்தின் இடையில் உள்ள கால்வாய் கல்வெட்டு வரை சரி செய்தால், கழிவுநீர், மழை நீர் முறையாக செல்லும்,'' என்றார்.
மாநில அரசுஆய்வு அவசியம்
கேரள மாநில சுற்றுலா வாகன ஓட்டுனர் சுவுகத் கூறுகையில், ''ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு, கூடலுார் வழியாகவே சென்று வர வேண்டி உள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற, ஊட்டிக்கு செல்லும் சாலை, பல இடங்களில் மிக மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது. இதில் பயணிப்பது சிரமத்தை ஏற்படுத்துகிறது. வாகனங்களுக்கு நுழைவு வரி வசூல் செய்கின்றனர். ஆனால் சாலையை சீரமைக்க நடவடிக்கை இல்லை. மூன்று மாநிலங்களை இணைக்கும் இப்பகுதி சாலையை, தரமாக சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,''என்றார். -நிருபர் குழு--