கோத்தகிரியில் மரம் விழுந்து வளைந்த மின் கம்பம்
கோத்தகிரி : கோத்தகிரி அரசு போக்குவரத்து கழக கிளை முன்பு மரம் விழுந்ததில், மின்கம்பம் வளைந்தது.கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், தென்மேற்கு பருவ மழை குறைந்து இருந்தாலும், அவ்வப்போது சாரல் மழையுடன், பலத்த காற்று வீசி வருகிறது. இதனால், பல பகுதிகளில் மரங்கள் விழுந்து வருகின்றன.இந்நிலையில், கோத்தகிரி கட்டபெட்டு இடையே, ஒரசோலை பகுதிக்கு சமீபத்தில் மாற்றப்பட்ட அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலகம் அருகே, பிரதான சாலையில் நேற்று முன்தினம் வீசிய பலத்த காற்றில் மரம் விழுந்தது.உயிரழுத்த மின் கம்பி மேல் மரம் விழுந்ததால், மின் ஒயர்கள் அறுந்து விழுந்ததில், மின் கம்பம் வளைந்து சாய்ந்தது. இதனால், ஒரு மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில், ஆட்கள் இல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மின்துறை ஊழியர்கள், விரைந்து வந்து, அறுந்து விழுந்த வயர்களை மாற்றிய பின், மின் தடை நீங்கியது. இப்பகுதியில் உள்ள அபாய மரங்களை அகற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.