பழங்குடியின மக்கள் அரசின் திட்டங்களை அறிய வேண்டும்
பந்தலுார்; பந்தலுார் அருகே தேவாலா தனியார் மண்டபத்தில், சட்ட பணிகள் குழு சார்பில் பழங்குடியின மக்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. டி.எஸ்.பி., ஜெயபாலன்வரவேற்றார். சட்ட பணிகள் குழு செயலாளர் நீதிபதி பாலமுருகன் தலைமை வகித்து பேசுகையில், ''பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றம் அடைய செய்ய, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை முறையாக பெற்று பயனடையவும், அரசு திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்து மக்கள் தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப தங்கள் சமுதாயத்தை உயர்த்தவும் முன் வர வேண்டும். பழங்குடியின மக்கள் தங்கள் குறைகளை இதுபோன்ற முகாம்களில், மனு வாயிலாக கொடுத்து, அதன் நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டு தீர்வு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, ரெட்கிராஸ் மூலம் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டதுடன், பல்வேறு குறைகள் அடங்கிய மனுக்களும் பெறப்பட்டது. அதில், டாக்டர் ஜெயனப்பாத்திலா, வனச்சரகர் சஞ்சீவி, வி.ஏ.ஓ., பார்வதி உட்பட பலர் பங்கேற்றனர். இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி நன்றி கூறினார்.