விநாயகர் சதுர்த்தி விழா; போலீசார் அணிவகுப்பு ஊர்வலம்
கூடலுார்; கூடலுாரில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. கூடலுாரில், இந்து முன்னணி சார்பில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைத்து, விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விழாவை முன்னிட்டு கூடலுாரில் நேற்று போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. நகராட்சி அலுவலகம் அருகே, துவங்கிய ஊர்வலத்துக்கு, டி.எஸ்.பி., வசந்தகுமார் தலைமை வகித்தார். ஊர்வலத்தில் மத்திய அதிவிரைவு படையினர் பங்கேற்றனர். ஊர்வலம், ஊட்டி - மைசூரு தேசிய நெடுஞ்சாலை, பழைய கோர்டு சாலை, கோழிக்கோடு சாலை வழியாக, துப்புகுட்டிபேட்டை பகுதியில் நிறைவு பெற்றது. ஊர்வலத்தில், இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், துரைராஜ், சித்ரா, போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பங்கேற்றனர்.