உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தொட்டபெட்டா சிகரத்தில் காட்டு யானை; சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிப்பு

தொட்டபெட்டா சிகரத்தில் காட்டு யானை; சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிப்பு

ஊட்டி, : ஊட்டி தொட்டபெட்டா சிகரத்தில் நடமாடி வரும் காட்டு யானையை விரட்டும் பணியில், இரண்டாவது நாளாக வனத்துறையினர் ஈடுபட்டனர்.ஊட்டியில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில்,சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள், தொட்டபெட்டா சிகரத்திற்கு சென்று இயற்கை காட்சிகளை கண்டு களிப்பது வழக்கம்.இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இங்குள்ள வனப்பகுதியில் சுற்றி திரிந்த ஒற்றை யானை, காட்சி முனை பகுதிக்கு நுழைய வந்துள்ளது. தகவல் அறிந்த வனத்துறையினர், சுற்றுலா பயணிகள் கூடியிருந்த பகுதிக்கு யானையை வரவிடாமல் தடுத்துள்ளனர். இதனை அடுத்து, சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இரவில் யானையை கண்காணிக்கும் பணி நடந்தது.இந்நிலையில், நேற்றும் காட்டு யானை அப்பகுதியில் முகாமிட்டதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தொட்ட பெட்டா சிகரம் நேற்று மூடப்பட்டது.மாவட்ட வன அலுவலர் கவுதம் முன்னிலையில், வனத்துறையினர் குழுக்களாக பிரிந்து, மாலைவரை யானையை விரட்டும் பணியில் ஈடுட்டனர். அத்துடன், யானை நடமாட்டம் குறித்து தகவல் தெரியாமல் வந்த சுற்றுலா பயணிகள் வாகனங்களை தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால், இப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை