மேலும் செய்திகள்
பீட்ரூட் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
27-Oct-2025
குன்னுார்: குன்னுாரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வேளாண் சந்தையில் துவங்கிய ஊட்டி பூண்டு ஏலம், திடீரென நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில், உருளைகிழங்கு, காரட், பீட்ரூட் உட்பட மலை காய்கறி விவசாயம் அதிகம் விளைவிக்கப்படுகிறது. இங்கு விளைவிக்கும் மலை தோட்ட காய்கறிகள் மேட்டுப்பாளையம் கொண்டு சென்று ஏலம் விடப்படுகிறது. இதனால், போக்குவரத்து செலவு மற்றும் ஏலம் விட, 10 சதவீத கமிஷன், கிடங்கில் சேமித்து வைக்க முடியாதது உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பல இன்னல்களை சந்திக்கின்றனர். இதற்கு தீர்வு காண, நீலகிரி விவசாயிகளின், விளை பொருட்களை மின்னணு வர்த்தகம் வாயிலாக எளிதாக விற்கவும், வாங்கவும், 2021ல் ஒருங்கிணைந்த வேளாண் சந்தை அமைக்க, வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, குன்னுார் எடப்பள்ளி, இளித்தொரை கிராமம் அருகே, 6.5 ஏக்கரில், 2 கோடி ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த வேளாண் சந்தை அமைக்கப்பட்டது. விலை குறைவு கடந்த 2024 மார்ச் 13ல், திறந்து வைக்கப்பட்டபோதும், ஓராண்டிற்கு மேல் செயல்படாமல் இருந்தது. இங்குள்ள அறைகள், அரசு கொறடா உறவினரின் பசுந்தேயிலை குடோனாக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. கடந்த ஆக., 14ல் கலெக்டர் மேற்பார்வையில், வேளாண்மை குழு, வேளாண் வணிக துறை, நீலகிரி விற்பனை குழு சார்பில், ஒழுங்குமுறை விற்பனை கூடம் திறந்து, வியாழன் தோறும் பூண்டு ஏலம் துவங்கியது. ஆரம்பத்தில், 5,000 கிலோ ஊட்டி பூண்டு ஏலத்திற்கு வந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து செப்.,ல் 20 ஆயிரம் கிலோ வரை ஏலம் விடப்பட்டது. மாவட்டத்தில் 1,500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படும் ஊட்டி பூண்டு கடந்த ஆக.,ல் கிலோ 200 ரூபாய்க்கு மேல் விவசாயிகளுக்கு கிடைத்தது. தற்போது உயர் ரக பூண்டும் 100 ரூபாய்க்கு குறைவாக ஏலம் போவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களாக இங்கு பூண்டு ஏலம் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களாக பூண்டு வாங்க ஓரிரு வியாபாரிகள் மட்டுமே வந்தனர். மறைமுக ஏலம் நடத்தும் நிலையில் இரு வியாபாரிகளும் விலையை குறைவாக கேட்கின்றனர். போட்டி இல்லாததால், விலை கிடைப்பதில்லை. வியாபாரிகள் அதிகளவில் வரவழைக்க வேளாண் துறை நடவடிக்கை எடுக்கவும், மேட்டுப்பாளையத்தில் நடக்கும் ஏலம் போன்று, அனைவரின் முன்னிலையில் வியாபாரிகள் ஏலம் கேட்கும் போது பொது ஏலமாக நடத்த வேண்டும். ஊட்டி பூண்டுக்காக துவக்கப்பட்ட ஏலத்தை, பல்வேறு காரணங்களை கூறி அதிகாரிகள் திடீரென நிறுத்தியுள்ளனர். விவசாயிகளின் நலன் கருதி மீண்டும் ஏலத்தை துவக்க வேண்டும். கேரளா, கர்நாடகா வியாபாரிகளையும் அழைத்து ஏலத்தில் பங்கேற்க வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். - விஸ்வநாதன் விவசாயி,குன்னுார்
27-Oct-2025