உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / நன்கொடையை சுருட்டிய ஊழியரிடம் ரகசியமாக வசூலித்த அதிகாரிகள் மதுரை தண்டாயுதபாணி கோவிலில் அடுத்த சர்ச்சை

நன்கொடையை சுருட்டிய ஊழியரிடம் ரகசியமாக வசூலித்த அதிகாரிகள் மதுரை தண்டாயுதபாணி கோவிலில் அடுத்த சர்ச்சை

மதுரை:மதுரை, தண்டாயுதபாணி கோவில் திருப்பணிக்காக, உபயதாரர்கள் கொடுத்த பல லட்சம் ரூபாய் நன்கொடைகளை கணக்கில் காட்டாமல் மோசடி செய்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்காமல், அவரிடம் ரகசியமாக அத்தொகையை அறநிலையத்துறை அதிகாரிகள் வசூலித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மதுரை, தண்டாயுதபாணி கோவில் திருப்பணிகள் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. பணிகள் துவங்கிய பின், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஒருவர், 8 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்தார். பலரும், பல லட்சம் நன்கொடை தந்தனர்.முக்கிய பிரமுகர் ஒருவர் திருப்பணிகளின் பெரும்பாலான செலவை ஏற்றுக்கொண்டார். இதை தனக்கு சாதகமாக்கிய கோவிலின் முக்கிய பொறுப்பில் உள்ள ஊழியர், முன்னாள் அமைச்சர் வழங்கிய 8 லட்சம் உட்பட பல லட்சம் ரூபாய் நன்கொடை விபரத்தை, செயல் அதிகாரி அங்கயற்கண்ணி கவனத்திற்கு கொண்டு செல்லாமல் மறைத்தார்.நன்கொடையை ஊழியர் 'சுருட்டியது' குறித்து, செயல் அதிகாரிக்கு புகார் மனு வந்தது. விசாரித்தபோது, அந்த ஊழியர், கணக்கு விபரங்களை அரைகுறையாக காண்பித்ததோடு, பலருக்கு, முன்பணம் கொடுத்திருப்பதாக மழுப்பினார்.மோசடி உண்மை என தெரியவந்ததை தொடர்ந்து, எவ்வளவு தொகை என கணக்கிட்டு, அதற்கு ஈடாக சில மாதங்களாக அந்த ஊழியரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டது. தற்போது மோசடி செய்த பணத்தில் இருந்து, கல்தளம், கோவில் கதவுகள் அமைத்து தருவதாக அந்த ஊழியர் உறுதி அளித்துள்ளார். அப்பணி முடிந்ததும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.அதே சமயம், மோசடி செய்த ஊழியர் குறித்து போலீசில் புகார் செய்யாமல், அவரிடம் ரகசியமாக வசூலித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, 'மோசடி நடந்தது குறித்து உபயதாரர்களுக்கு தெரிந்தால் திருப்பணி பாதிக்கும். கோவில் பெயரும் கெடும். போலீசில் புகார் செய்தால் மோசடி பணத்தை திரும்ப பெற முடியாது. இதுகுறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது' என்றனர்.இக்கோவிலில் தான், சில நாட்களுக்கு முன் அர்ச்சகர் தட்டில் விழும் காணிக்கையை உண்டியலில் செலுத்த செயல் அலுவலர் உத்தரவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஹிந்து அமைப்புகளின் எதிர்ப்பால் உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி