சாலையோர மரத்தில் கார் மோதி மாமனார், மருமகன், குழந்தை பலி
பெரம்பலுார்:பெரம்பலுார் அருகே, புளியமரத்தில் கார் மோதிய விபத்தில், மாமனார், மருமகன், குழந்தை என, மூவர் உயிரிழந்தனர்.கன்னியாகுமரி மாவட்டம், தெற்கு அகத்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் அன்புசெல்வன் மகன் பாலபிரபு, 28. இவர், நேற்று முன்தினம் இரவு, தன் மனைவி கவுரி, 27, மகள் கவிகா, 2, மற்றும் மாமனாரான திருப்பூர் மாவட்டம், பல்லடம் கந்தசாமி, 50, ஆகியோருடன் 'மாருதி எஸ் - பிரஸ்ஸோ' காரில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தார். காரை பாலபிரபு ஓட்டினார். நேற்று காலை 7:50 மணிக்கு, பெரம்பலுார் மாவட்டம், பெருமாள்பாளையம் கிராமம் அருகே திருச்சி- - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர புளியமரத்தில் மோதியது. இதில், காரில் இருந்த மாமனார், காரை ஓட்டிய மருமகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலும், குழந்தை கவிகா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலும் இறந்தனர். படுகாயமடைந்த கவுரி, பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பாடாலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.