காப்பர் வயர் திருடிய 7 பேர் கைது; 300 கிலோ பறிமுதல்
கமுதி; கமுதி அருகே செங்கப்படை அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அதானி சோலார் மின் உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இரண்டு மாதங்களாக இரவு நேரங்களில் காப்பர் வயர்கள் அடிக்கடி திருடப்பட்டது.கமுதி,கோவிலாங்குளம் போலீஸ் ஸ்டேஷனில் அதானி நிர்வாகம் சார்பில் ரூ.20 லட்சம் மதிப்பிலான காப்பர் வயர்கள் திருடு போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கமுதி டி.எஸ்.பி., இளஞ்செழியன் உத்தரவின் பேரில் சிறப்பு எஸ்.ஐ.,க்கள் சகாதேவன், முத்துராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து கமுதி, அருப்புக்கோட்டை, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை செய்தனர்.நேற்று இரவு காரில் வந்த ஐந்து பேர் அதானி சோலார் நிறுவனத்தில் மீண்டும் காப்பர் வயர் திருடியுள்ளனர். போலீசார் விசாரணை செய்த போது வயர் திருடியது தெரிய வந்தது. திருட்டில் ஈடுபட்ட துாத்துக்குடி மாவட்டம் புதியம்புத்துாரை சேர்ந்த சந்தோஷ் 22, அசோக் 20, சுடலை மணி 19, கோபி 22, மாரிகண்ணன் 25, சக்திகுமார் 29, நந்தீஸ்வரன் 22, ஆகிய 7 பேரை கைது செய்தனர்.அவர்களிடமிருந்து ஒரு கார், 300 கிலோ காப்பர் வயர் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.