விபத்து அபாயம்* சேதமடைந்த கட்டடத்தில் மின்வாரிய பண்டகசாலை* பாதுகாப்பற்ற நிலையில் மின்சாதனப் பொருட்கள்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மின்வாரிய கிளை பண்டகசாலை அலுவலகம், பொருட்கள் வைக்கும் கட்டடம் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் சேதமடைந்துள்ளதால் மின்சாதன பொருட்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. ராமநாதபுரம் ரயில்வே பீடர் மேம்பாலம் அருகே ராமேஸ்வரம் ரோட்டில் உள்ள துணை மின்வாரியம் வளாகத்திற்குள் மின்வாரிய கிளை பண்டகசாலை செயல்படுகிறது. இங்குள்ள அலுவலகம், மின்சாதன பொருட்கள் வைப்பு அறைகள் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் கூரை சேதமடைந்து கீழே விழுகிறது. மழை பெய்தால் நீர் கசிவால் மின்சாதன பொருட்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக பண்டகசாலை வளாகத்தில் பயன்பாடில்லாத கிணறு, பழைய கட்டடங்கள் அகற்றப்படாமல் மின்மாற்றிகள், மின் ஒயர்கள் புதர்மண்டி கிடக்கின்றன. பாம்பு, பூரான் போன்றவைகளின் நடமாட்டம் உள்ளதாகவும் கூறுகின்றனர். அலுவலக கட்டடம் கூரை பெயர்ந்துள்ளதால் பணியாளர்கள் விபத்து அச்சத்துடன் அங்கு பணிபுரிகின்றனர். எனவே பண்டகசாலை வளாகத்தில் உள்ள பயன்பாடில்லாத கட்டடங்களை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். புதிதாக அலுவலகம், பொருட்கள் வைப்பு அறைகள் கட்டித்தர மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுகுறித்து ராமநாதபுரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் வெண்ணிலாவிடம் கேட்ட போது, கிளை பண்டகசாலை சேதமடைந்துள்ள விபரம் குறித்து எனது கவனத்திற்கு வரவில்லை. நேரடியாக பார்வையிட்டு அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.----