* ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலகத்தில்.. * கழிப்பறை படுமோசம்: சீரமைக்க வலியுறுத்தல்
பட்டணம்காத்தான் : ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் உள்ள கழிப்பறைகள் பராமரிப்பின்றி செடி கொடிகள் வளர்ந்தும், கூரையில் விரிசல், பெயரளவில் துாய்மைப்பணியால் துர்நாற்றத்தால் அலுவலர்கள் நோய்த் தொற்று அச்சத்தில் உள்ளனர்.பட்டணம்காத்தான் ஊராட்சி சேதுபதிநகரில் கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. பழைய கலெக்டர் அலுவலகம் கீழ்தளம், மேல் தளத்தில் முதன்மைக் கல்வி அலுவலகம், மகிளா நீதிமன்றம், ஆதார் புகைப்பட மையம், இ-சேவை மையம், மத்திய கூட்டுறவு வங்கி என பல அலுவலகங்கள் செயல்படுகின்றன. தினமும் வெளியூர் அலுவலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர். இங்கு பணிபுரியும் அலுவலர்கள் பயன்பாட்டிற்காக ஆண், பெண் என தனித்தனியாக கழிப்பறைகள் உள்ளன. இவை சரிவர பராமரிப்பு இல்லாமல் கட்டடத்தில் செடி,கொடிகள் வளர்ந்துள்ளது. கழிப்பறை தினசரி சுத்தம் செய்யப்படாமல் கோப்பைகள் உப்புக்கறை படிந்து துர்நாற்றம் வீசுகிறது. போதிய தண்ணீர் வசதியும் இல்லை. இதனால் பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் நொய்த்தொற்று அச்சத்தில் உள்ளனர்.எனவே கழிப்பறைக்குள் வளர்ந்துள்ள செடிகளை அகற்றியும், கட்டட விரிசல்களை சரிசெய்து, கழிப்பறை கோப்பைகளை மாற்றவும் பொதுப்பணித்துறை (கட்டுமானம்) அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டணம் காத்தான் ஊராட்சி நிர்வாகம் போதிய தண்ணீர் வசதி, துாய்மை பணியாளர்கள் மூலம் தினசரி கழிப்பறையை சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என அலுவலர்கள் வலியுறுத்தினர்.-