| ADDED : மே 30, 2024 10:29 PM
ஆர்.எஸ்.மங்கலம்,- ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தமங்கலம் மாடக்கோட்டை முனீஸ்வரர் கோயிலில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.சாத்தமங்கலம் மாடக்கோட்டை முனீஸ்வரர் கோயில் வைகாசி விழா மே 23ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் மூலவருக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. விழாவின் தொடர்ச்சியாக நேற்று மாலை 7:30 மணிக்கு சாத்தமங்கலம் விநாயகர் கோயிலில் இருந்து 2 கி.மீ.,க்கு பக்தர்கள் பூத்தட்டு எடுத்து மங்கல இசை முழங்க ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர்.கோயிலில் பக்தர்கள் கொண்டு வந்திருந்த பூக்களால் மூலவருக்கு மலர் அபிஷேகம் செய்யப்பட்டு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. பின் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவின் தொடர்ச்சியாக இன்று (மே 31) காலை 10:00 மணிக்கு விரதம் இருந்த பக்தர்கள் சாத்தமங்கலம் விநாயகர் கோயிலில் இருந்து ஊர்வலமாகச் காவடி, பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும், கோயில் முன்பு தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றும் பூக்குழி விழா நடக்கிறது.அதைத் தொடர்ந்து நாளை(ஜூன் 1) காலை கிடாய் வெட்டு நிகழ்வுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை விழாக் குழு தலைவரும் சென்னை மாநகராட்சி கணக்கு மற்றும் நிதிக்குழு தலைவரான தனசேகரன், கோயில் டிரஸ்டி கருப்பத்தேவர் ஆகியோர் செய்து வருகின்றனர்.