விபத்து, நாய் கடித்து பலியாகும் மான்கள் * முறையாக கணக்கெடுப்பு நடத்தப்படுமா
ராமநாதபுரம்,ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் புள்ளி மான்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நாய்கள் கடித்தும், சாலை விபத்துக்களிலும் பலியாகி வருகின்றன. எனவே மாவட்டத்தில் எவ்வளவு மான்கள் உள்ளன என முறையாக கணக்கெடுப்பு நடத்தி அவற்றை பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இம்மாவட்டத்தில் கமுதி, பரமக்குடி தெளிச்சாத்தநல்லுார், சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை, தொண்டி, மண்டபம், உச்சிபுளி உள்ளிட்ட பகுதிகளில் அடர்ந்த கருவேல மரக்காடுகளில் ஏராளமான புள்ளி மான்கள் வசிக்கின்றன. இவை இரை மற்றும் தண்ணீருக்காக சில நேரங்களில் ரோட்டை கடந்து செல்கின்றன. பல மான்கள் வேட்டை நாய்கள் கடித்தும், வாகனங்களில் அடிக்கப்பட்டும் பலியாகின்றன. பலியாகும் மான்களின் எண்ணிக்கை சில நாட்களாக அதிகரித்துள்ளது.மான்களை பாதுகாப்பதில் வனத்துறையினர் மெத்தனமாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. 2021ல் மட்டும் 11 பெண் மான்கள் உட்பட 26 புள்ளி மான்கள் இறந்துள்ளன. இதனை தடுக்க பறவைகள் கணக்கெடுப்பு போன்று ஆண்டு தோறும் வனவிலங்குகள் காட்டுப்பன்றி, மான்கள் நடமாட்டம் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அதிகமாக உள்ள இடங்களில் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.வனத்துறையினர் கூறுகையில், 'ஒரே இடத்தில் மான்கள் வாழ்வது கிடையாது. இடம் பெயர்வதால் துல்லியமாக கணக்கெடுப்பது சிரமம். அதிக நடமாட்டமுள்ள இடங்களில் மான்களை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டி வருகிறோம்,' என்றனர்.