தரமற்ற ஊராட்சி அலுவலகம் கட்டட பணி நிறுத்த விவசாய சங்கம் கோரிக்கை
முதுகுளத்துார்: ஆப்பனுார் ஊராட்சியில் புதிய ஊராட்சி அலுவலக கட்டடம் கட்டும் பணி தரமற்றதாக நடப்பதால் பணிகளை நிறுத்த வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.முதுகுளத்துாரில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜீவா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கருணாநிதி முன்னிலை வகித்தார். மாவட்டத் துணைச் செயலாளர் பார்த்திபன் வரவேற்றார். மூக்கையூர் பகுதிகளில் உப்பளம் அமைப்பதால் பல்லாயிரம் பனை மரங்கள் அழிக்கப்படுவதோடு அப்பகுதியில் உள்ள குடிநீர் உப்பு நீராக மாறி வருகிறது. எனவே அரசு உப்பளத்தை தடுத்து நிறுத்த வேண்டும். சிறு தானியங்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் சிறுதானிய விதைகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும். அனைத்து விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ஆப்பனூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி அலுவலக கட்டடம் தரமற்ற பணியால் சேதமடைந்து வருகிறது. எனவே உடனடியாக பணியை நிறுத்தி செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் தரமான முறையில் இறக்கி பணி செய்யாவிட்டால் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட குழு உறுப்பினர்கள் நாகராஜன், தங்கராஜ், சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.