மாரியூரில் பக்தர்களுக்கான வசதியை மேம்படுத்துங்க இருள் சூழ்ந்த கடற்கரை
சாயல்குடி : சாயல்குடி அருகே மாரியூரில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற பூவேந்திய நாதர் கோயில் திகழ்கிறது. வருண பகவானால் பூஜிக்கப்பட்ட சிவ ஸ்தலத்தில் நாள் தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு முன்பு மாரியூர் மன்னார் வளைகுடா கடலில் புனித நீராடி செல்கின்றனர்.தை, ஆடி, மாகாளய அமாவாசை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நிகழக்கூடிய முளைப்பாரி, கொடை விழா ஆகியவற்றிற்கு மாரியூர் கடற்கரையில் புனித நீராடி செல்லும் வழக்கம் உள்ளது. இந்நிலையில் பக்தர்கள் விட்டுச் செல்லும் துணிகளை அகற்றாமல் ஊராட்சி நிர்வாகத்தினர் உள்ளனர். கடற்கரையோரங்களில் அதிகளவு பிளாஸ்டிக் குப்பை கடலுக்குள் செல்வதால் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான டால்பின், கடல் ஆமை, கடல் பசு உள்ளிட்டவைகள் பாதிப்பை சந்திக்கின்றன.கடலில் நீராடிய பக்தர்கள் கூறியதாவது: அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடற்கரை வளாகம் இருள் சூழ்ந்துள்ளது. அப்பகுதியில் உயர் கோபுர ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும். பெண்கள் நீராடி விட்டு உடை மாற்றுவதற்கான அறை கட்டடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. புதிய கட்டடம் கட்டட வேண்டும்.கோயிலில் இருந்து கடற்கரை செல்லும் 1 கி.மீ., தொலைவிற்கு மின்கம்பங்களில் மின்விளக்கு அமைக்க வேண்டும். பக்தர்களுக்கான கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். எனவே சுற்றுலாத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் பக்தர்களின் நலன் கருதி குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றனர்.