சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்குஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி
ராமநாதபுரம்: மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 11 ஒன்றியங்கள், 429 ஊராட்சிகள் வாரியாக நாளை(செப்.9) முதல் 20 வரை சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் நடக்கிறது.குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணிகள்,தாய்மார்கள் மற்றும் முதியோர்கள் போதிய ஊட்டச்சத்து இன்றி பலவித நோய்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக ரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில் உணவு, ஊட்டச்சத்து, உடல் நலம், தன்சுத்தம் மற்றும் சுகாதாரம் பேணுதல்திட்டத்தில் ரத்தசோகை இல்லாத கிராமம் குறித்து பிரசாரம் நடக்கிறது.மேலும் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத்திருவிழா மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்கள் மற்றும் 429 ஊராட்சிகளிலும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் நடக்கிறது. ஊராட்சி அளவிலான போட்டிகள் செப்.9 முதல் 12 வரை கிராம ஊராட்சி சேவை மையத்தில் நடக்கிறது. ஒன்றிய அளவிலான போட்டிகள் செப்.16 முதல் 20 வரை அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடக்கிறது. ஒன்றிய அளவிலான போட்டியில் முதல் பரிசு பெறும் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு மாவட்ட அளவில் போட்டி நடத்தப்படும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துஉள்ளார்.