திரவுபதி அம்மன் கோயிலில் பட்டாபிஷேகம் கோலாகலம்
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயிலில் கோலாகலமாக நடந்த பட்டாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.திரவுபதி அம்மன் கோயில் விழா ஆக.9ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 25 நாட்கள் நடந்த விழாவில் தினமும் மாலையில் பல்வேறு கிராம மண்டகப்படி நிகழ்வுகளாக சக்தி கரகம், தர்மர் பிறப்பு, கிருஷ்ணர் பிறப்பு, திரவுபதி திருக்கல்யாணம், சக்ராபர்ணகோட்டை, சுபத்திரை கல்யாணம், அபிமன்யு பிறப்பு, தவசு கடப்பலி, படுகளம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.தொடர்ச்சியாக ஆக.30ல் முக்கிய விழாவான பூக்குழி விழா நடைபெற்றது. செப்.1ல், மூலவர் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுதல் விழா நடைபெற்றது. நேற்று இரவில் மூலவர் அம்மனுக்கு பட்டாபிஷேக விழா நடந்தது.முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் விழாக் கமிட்டியினர் செய்திருந்தனர்.