கீழக்கிடாரத்தில் உள்ள ஊருணியில் ஆக்கிரமிப்பை தடுக்க கோரிக்கை
சிக்கல் : சிக்கல் அருகே கீழக்கிடாரம் ஊராட்சியில் 4 ஏக்கர் ஊருணியை தனி நபர்கள் உரிமை கொண்டாடுவது மற்றும் அதில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அனுமதி இன்றி வெட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர். புதிய தமிழகம் கட்சியின் கடலாடி ஒன்றிய செயலாளர் லாசர் கூறியதாவது:கீழக்கிடாரம் பொது ஊருணியில் தனிநபர்கள் உரிமை கொண்டாடி சீமைக் கருவேல மரங்களை வெட்டுவது உள்ளிட்ட சட்டத்திற்கு புறம்பான வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து கடலாடி தாலுகா அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனுவின் பேரில் சமீபத்தில் தாசில்தார் இடத்திற்கு வந்து பார்வையிட்டு பொது சொத்துக்களை ஆக்கிரமிப்பதை தடுத்து நிறுத்த வாய்மொழி உத்தரவு பிறப்பித்தார்.இந்நிலையில் பொதுமக்களின் பொது பயன்பாட்டில் உள்ள ஊருணி ஆக்கிரமிப்பை தடுக்க பொது அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். இது குறித்து கலெக்டருக்கு புகார் மனு அனுப்பி உள்ளேன் என்றார்.