| ADDED : மே 28, 2024 05:10 AM
ராமநாதபுரம், : புதியதாக பணியில் சேர்ந்த ஊர்க்காவல் படையினர் பயிற்சியின் போது சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு எஸ்.பி., சந்தீஷ் பதக்கங்களை வழங்கினார். பின் அவர்களுக்கு உணவு பரிமாறினார்.தமிழகத்தில் போலீஸ் துறைக்கு அடுத்தபடியாக ஊர்க்காவல் படையினர் சிறந்த பணியாற்றி வருகின்றனர். தேர்தல் பணி, கோயில்களில் பாதுகாப்பு பணி, இரவு ரோந்துப்பணி, முக்கிய தலைவர்கள், அரசுத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளை திறம்பட செய்கின்றனர். ராமநாதபுரம் மாவட்ட ஊர்க்காவல்படைக்கு 687 பேர் விண்ணப்பம் செய்தனர். 2024 பிப்.17 ல் நேர்காணல் நடந்தது. இதில் 108 பேர் கடலோர காவல்படை குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான அடிப்படை பயிற்சி 45 நாட்கள் நடந்தது. பி.டி., ஸ்குவார்டு டிரில், பிளட்டூன் டிரில், கம்பெனி டிரில், பயர் சர்வீஸ் கிளாஸ் ஆகியவை ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் வழங்கப்பட்டது. இதில் தகுதியான 97 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.பயிற்சியை நிறைவு செய்த ஊர் காவல் படையினர் எஸ்.பி., சந்தீஷ் முன்னிலையில் அணிவகுப்பு நடத்தினர்.தேர்வான அனைவரும் பொறுமையாகவும், கடமையுணர்வுடன் பணியாற்ற வேண்டும். பணியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், என எஸ்.பி., அறிவுரை வழங்கினார்.சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களுக்கு எஸ்.பி., உணவு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.