பூட்டிக்கிடக்கும் மகளிர் திட்ட தொழிற்கூடங்கள் மீண்டும் திறக்கப்படுமா
ராமநாதபுரம்: மாவட்ட மகளிர் நல மேம்பாட்டு திட்ட செயலாக்க அலகு அலுவலக வளாகத்தில் தொழில் முனைவோர் பயிற்சிக்கூடங்கள் பயன்பாடின்றி பல ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ளதால் அவற்றை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார மகளிர் திட்டம் சார்பில் மத்திய, மாநில அரசுகள் நிதி உதவியுடன் ஊரக ஏழை மக்களுக்கான நிதி சார்ந்த, சாராத பல்வேறு சேவைகளையும், வாழ்வாதாரத்தை உயர்த்தி குடும்ப வருமானத்தை பெருக்க வழிவகை செய்யப்படுகிறது. இதன்படி ராமநாதபரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் 8500க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சியாக தையல், கடல் உணவுப்பொருட்கள் தயாரித்தல், கோழி வளர்ப்பு, பனை ஓலையில் கைவினைப் பொருட்கள், ஆபரணம் தயாரித்தல், மீன் வளர்த்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊரக வாழ்வாதார மகளிர் திட்ட முகமை அலுவலகத்தில் நாட்டுக்கோழி குஞ்சு பொரித்தல் மையம், காகிதப்பை உற்பத்தி மையம், பனை ஓலை பொருட்கள், கடல் சிப்பி உற்பத்தி மையம் உள்ளிட்ட தொழில் முனைவோர் பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மகளிர் குழுவினருக்கு கடந்த காலங்களில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. கடந்த 4 ஆண்டுகளாக பயிற்சி கூடங்கள் பூட்டிக் கிடக்கின்றன. பயன்பாடு இல்லாமல் செடி, கொடிகள் வளர்ந்து கட்டடம் சேதமடைந்துள்ளன. அவற்றை சீரமைத்து மீண்டும் தொழிற்பயிற்சி கூடங்களில் மகளிருக்கு பயிற்சி அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.