ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேருக்கு நவ.25 வரை சிறை
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் சிறை பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை நவ.,25 வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.நவ.,9ல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற கீதன், சகாயராஜ், ராஜா ஆகியோரது விசைப்படகுகளை சிறைபிடித்த இலங்கை கடற்படை வீரர்கள் அவற்றில் இருந்த 23 மீனவர்களை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். பின் மீனவர்கள் மீது யாழ்ப்பாணம் மீன்துறை அதிகாரிகள் வழக்குப் பதிந்து நேற்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை நவ.,25 வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மீனவர்களுக்கு கைவிலங்கிட்டு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.