பார் உரிமையாளர் கொலை முயற்சி 3 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர்
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் சூரன்கோட்டையை சேர்ந்த பார் உரிமையாளர் நிர்மலை வெட்டிக்கொலை செய்ய முயன்ற வழக்கில் 3 பேர் ராமநாதபுரம் மாஜிஸ்திரேட் 1 கோர்ட்டில் சரணடைந்தனர். சூரன்கோட்டையை சேர்ந்த சிவசங்கரன் மகன் நிர்மல் 34. இவர் கிருஷ்ணா நகர் பகுதியில் மதுபான பார் நடத்தி வருகிறார். இந்த பாரில் மது அருந்த வந்த ஆர்.எஸ்.மடையை சேர்ந்தவர்களுக்கும், நிர்மலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த முன் விரோதம் காரணமாக தேவிப்பட்டினம் கடற்கரைசாலை சந்திப்பில் டூவீலரில் ஜூன் 25 மதியம் 1:30 மணிக்கு வந்த நிர்மலை ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் வெட்டி சாய்த்தது. அவர் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில் ஆர்.எஸ்.மடை நடுத்தெருவை சேர்ந்த செந்தில்குமார் மகன் பாரத் 24, அதே பகுதியை சேர்ந்த முத்துராமன் மகன் அபினேஷ் 23, 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் சூரன்கோட்டை மருதுபாண்டியர் நகரை சேர்ந்த குமரன் மகன் பாலாஜி 22, ராமநாதபுரம் கொத்தர் தெருவை சேர்ந்த ஜெகதீஸ்வரன் 19, ராமநாதபுரம் அரண்மனை பகுதியை சேர்ந்த கோபால் மகன் ஹரிஹரன் 23, ஆகியோர் ராமநாதபுரம் மாஜிஸ்திரேட் கோர்ட் எண் 1 ல் நேற்று சரணடைந்தனர். மாஜிஸ்திரேட் நிலவேஸ்வரன் மூவரையும் ஜூலை 16 வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். பார் உரிமையாளர் கொலை முயற்சி வழக்கில் இது வரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.