கிரைண்டர் செயலியில் பழகி வழிப்பறி: 4 வாலிபர்கள் கைது
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 'கிரைண்டர்' செயலியில் பழகி வாலிபரிடம் அலைபேசியை வழிப்பறி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். பரமக்குடி அருகே வளையனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுல கண்ணன் 29. 'கிரைண்டர்' செயலி மூலம் இவருடன் சிலர் பழகினர். ஜூலை 12ல் கோகுல கண்ணனிடம் ஆசை வார்த்தை கூறி சோமநாதபுரம், அண்டக்குடி விலக்கு பகுதிக்கு வரவழைத்தனர். அங்கு வைத்து கோகுல கண்ணனிடம் கத்தியை காட்டி மிரட்டி அலைபேசியை பறித்துவிட்டு தப்பினர். இவரது புகாரில், வழிப்பறியில் ஈடுபட்ட பரமக்குடியைச் சேர்ந்த அன்புமணி 21, ரினோத் 19, கோகுல்நாத் 19, சிவகார்த்திக் 19, ஆகிய நான்கு வாலிபர்களை எமனேஸ்வரம் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மிரட்டி பறித்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள அலைபேசியை கைப்பற்றினர்.