உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அன்னக்கூடை விழாவில் பெருமாளுக்கு விதவிதமாக கலவைசாதம் நைவேத்யம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அன்னக்கூடை விழாவில் பெருமாளுக்கு விதவிதமாக கலவைசாதம் நைவேத்யம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் அன்னக்கூடை உற்ஸவ விழாவில் பல்வேறு வகையான இனிப்பு, கார வகைகள், பட்சண வகைகள், விதவிதமான சாதங்கள் என 20க்கும் மேற்பட்ட வகைகளில் நைவேத்தியமாக வைக்கப்பட்டது. பெருமாள் கோயில்களில் உற்ஸவ காலங்களில் அன்னக்கூடை சிறப்பு வாய்ந்தது. இதை அன்ன பாவாடை உற்ஸவம் என்றும் சொல்வதுண்டு. புராணத்தில் கோவர்த்தன மலையை ஒரு விரலால் துாக்கிப் பிடித்த கண்ணபிரானுக்கு நன்றி செலுத்தும் விதமாக இவ்விழா கொண்டாடப்பட்டது. இதன்படி நேற்று ஆதி ஜெகநாத பெருமாள் சன்னதி முன்புறம்அன்னக்கொடை உற்ஸவம் நடந்தது. பல்வேறு வகையான இனிப்பு, கார வகைகள், பட்சண வகைகள் மற்றும் விதவிதமான சாதங்கள் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட வகைகளில் அண்டாக்களில் வரிசையாக காட்சிப்படுத்தி பட்டு அவை பெருமாளுக்கு நைவேத்தியமாக வைக்கப்பட்டது. சுவாமி தரிசனம் செய்வதற்காகவும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக நேற்று மாலை திருப்புல்லாணி ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தில் இருந்து ஸ்ரீரங்கம் ஜீயர் ஸ்ரீ வராக மகா தேசிகன் சுவாமி கோயிலுக்குள் வருகை தந்தார். அவருடன் ஏராளமான சீடர்கள் வந்திருந்தனர். மூலவர் ஆதி ஜெகநாத பெருமாள் சன்னதி முன் புறம் வைக்கப்பட்ட பிரசாதங்களுக்கு முன்பு சாற்று முறை கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவை பாடப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர், உற்ஸவ குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை