எச்சரிக்கையை மீறி கடலுக்கு செல்லும் மீனவர் மீது நடவடிக்கை
தொண்டி: புயல் எச்சரிக்கை மீறி கடலுக்கு சென்றால் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் என்று மீன்வளத்துறையினர் எச்சரித்துள்ளனர். வங்க கடலில் மோந்தா புயல் அறிவிக்கபட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கபட்டுள்ளது. ஆனால் சில மீனவர்கள் அதை பொருட்படுத்தாமல் கடலுக்கு செல்கின்றனர். இது குறித்து தொண்டி மீன்வளத்துறை மற்றும் மரைன் போலீசார் கூறியதாவது-புயல் எச்சரிக்கையை மீறுவது மீனவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும். வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கும் சமயங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். கடல் கொந்தளிப்பாக இருப்பதால் மீனவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும். எனவே மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது. படகுகளை பாதுகாப்பாக நிறுத்த வேண்டும். சில கடலோர கிராம மீனவர்கள் கடலுக்கு செல்வதாக தகவல் கிடைத்துள்ளது. தடையை மீறி மீனவர்கள் கடலுக்கு சென்றால் படகு பறிமுதல் செய்வதோடு, அரசின் நலத்திட்டங்கள் நிறுத்தபடும். மீன்துறை சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்கள் கடலுக்கு செல்கிறார்களா என ஆய்வு செய்து வருகிறோம் என்றனர்.