ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் கூடுதல் பிளாட்பாரம் தேவை
ராமநாதபுரம் : ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் கூடுதல் பிளாட்பாரங்கள் அமைக்கப்பட்டு கூடுதல் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் பாதையில் ராமநாதபுரம் அமைந்துள்ளது. ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து எந்த ரயில்களும் இயக்கப்படவில்லை. அனைத்து ரயில்களும் ராமேஸ்வரத்தை மையமாக கொண்டு இயக்கப்படுகின்றன. ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு காலை 6:45, 7 :25, மதியம் 12:03, இரவு 7:03 ஆகிய நேரங்களில் முன் பதிவில்லா ரயில்கள் இயக்கப்படுகின்றன. ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு திங்கள், புதன், சனி ஆகிய நாட்களில் இரவு 9:55 மணிக்கு இயக்கப்படுகின்றன. ஓகா வாராந்திர ரயில் வெள்ளிக் கிழமைகளில் காலை 11:25 மணிக்கு இயக்கப்படுகிறது. தற்போது ராமேஸ்வரம் ரயில் நிலைய விரிவாக்கப்பணிகள் நடந்து வருகிறது. பாம்பன் புதிய பாலம் பணிகள் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. ராமநாதபுரம், மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து சில ரயில்களும் இயக்கப்படுகின்றன. புவனேஸ்வர் ஞாயிற்றுக்கிழமை தோறும் இயக்கப்படுகிறது. செகந்திராபாத் வெள்ளிக்கிழமை தோறும் காலை 9:50 மணிக்கு இயக்கப்படுகிறது. ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் திருப்பதிக்கு மாலை 5:18க்கு புறப்படுகிறது.போட் மெயில் விரைவு வண்டி சென்னைக்கு தினமும் மாலை 6:28க்கு இயக்கப்படுகிறது. தினசரி இரவு 9:20க்கு சென்னைக்கும் எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. கோவைக்கு புதன் கிழமை இரவு 8:13 க்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இத்தனை ரயில்கள் இருந்தும் ராமநாதபுரத்தில் இருந்து எந்த ரயிலும் இயக்கப்படவில்லை. ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் தற்போது மூன்று பிளாட்பாரங்கள் உள்ளன. இதில் ஒன்று மெயின் லைனாகவும், மற்றொன்று மாற்றுப்பாதைக்காகவும், மற்றொன்று சரக்கு ஏற்றி இறக்க என மூன்று நடைமேடைகள் மட்டுமே உள்ளன. ரயில்கள் நிறுத்தம் செய்வதற்கு கூடுதல் பிளாட்பாரங்கள் அமைக்கப்படவில்லை.ரயில்கள் பராமரிப்பு பணிக்கான ரயில்வே லைன்களும் இல்லாத நிலையில் நெருக்கடியில் ராமநாதபுரம் ரயில் நிலையம் உள்ளது. இயற்கை சீற்றம் காரணமாக ரயில்கள் ராமேஸ்வரம் செல்ல முடியாத நிலை இருந்தால் ராமநாதபுரத்தில் ரயில்களை நிறுத்தி இயக்குவதற்கான ஏற்பாடுகளை ரயில்வே நிர்வாகம் செய்ய வேண்டும். இங்கு ரயில்களை நிறுத்த வசதியாக கூடுதல் பிளாட்பாரங்கள், பிட் லைன்கள் அமைத்து ராமநாதபுரத்தை தெற்கு ரயில்வேயில் முக்கியமான முனையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.