மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 7 மாதமாக செயல்படாத அம்மா உணவகம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள அம்மா உணவகம் 7 மாதங்களாக செயல்படாமல் உள்ளது. இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே மற்றும் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் அ.தி.மு.க., ஆட்சியில் அம்மா உணவகம் அமைக்கப்பட்டது. ஆட்சிமாற்றம் காரணமாக பராமரிக்கப்படாமல் பெயரளவில் இயங்குகின்றன. இங்கு குறைந்த விலையில் உணவு விற்பனை செய்வதால் ஏராளமானவர்கள் அம்மா உணவகத்திற்கு சாப்பிட வருகின்றனர். இந்நிலையில் ஜன.,1ல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகம் கட்டட கூரை பெயர்ந்து கீழே விழுந்ததால் அன்று முதல் செயல்பட வில்லை. அவ்விடத்திற்கு பதிலாக மருத்துவமனை வளாகத்திற்குள் ஒரு கட்டடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதுவும் தற்போது வரை திறக்கப்படாமல் பூட்டியுள்ளது. எழை மக்கள், தொழிலாளர்கள் வெளியே அதிக விலைக்கு உணவு வாங்கி சிரமப்படுகின்றனர். எனவே அம்மா உணவகம் புதிய கட்டடத்தை விரைவில் திறக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.