காலை உணவு திட்டத்தில் அம்மா உணவக ஊழியர்கள்
கீழக்கரை, - தமிழக அரசின் காலை உணவு திட்டத்திற்கு உரிய பணியாளர்கள் நியமித்து சமையல் செய்யாமல் சம்பளமின்றி அம்மா உணவக சமையல் பணியாளர்களை பயன்படுத்தும் நிலை பல இடங்களில் உள்ளது.அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்திருந்தாலும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கு காலை உணவு சமைப்பதற்கு தனியாக சமையலர்களை நியமிக்காமல் அம்மா உணவகத்தில் பணி செய்யும் பணியாளர்களைக் கொண்டு சமைத்து வருகின்றனர். கீழக்கரையை சேர்ந்த தன்னார்வலர் கீழை பிரபாகரன் கூறியதாவது:ஒன்று முதல் 5ம் வகுப்புகளுக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தில் அதற்கான சமையலர்களை வழங்கி இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.இதற்கு மாறாக கீழக்கரை அம்மா உணவகத்தில் பணி புரியும் 10 பெண்களை சுழற்சி முறையில் இருவர் வீதம் தினமும் பள்ளி வேலை நாட்களில் காலை உணவு சமைப்பதற்கு அனுப்பி வைக்கின்றனர். காலை உணவு திட்டத்திற்கு என தனியாக பணியாளர்களுக்கு ஒதுக்கப்படும் ஊதியம் எங்கே செல்கிறது.யாரோ ஒருவருக்கு கிடைக்க வேண்டிய வேலையை தடுத்து அரசின் வழிகாட்டுதலை பின்பற்றாமல் அம்மா உணவகப் பணியாளர்களை பயன்படுத்துவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.