வேளாண் சாகுபடியில் நவீன கருவிகளை கண்டுபிடிக்கும் விவசாயிகளுக்கு விருது
ராமநாதபுரம்:தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் நவீன வேளாண் கருவிகள் மற்றும் சாகுபடி தொழில் நுட்பங்களை கண்டுபிடிக்கும் விவசாயிகளுக்கு மாநில அளவில் விருது வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பங்குபெற விரும்பும் விவசாயிகள் தங்களது பெயரை உழவர் செயலி மூலம் பதிவு செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வழங்க வேண்டும். பதிவு கட்டணம் ரூ.150 செலுத்தி பங்கேற்பாளர் தனது சாதனை குறித்த விளக்கம் மற்றும் விபரங்களுடன் மாவட்ட அளவிலான குழுவிடம் செயல் விளக்கங்கள், இயந்திரங்கள் புகைப்படம் அல்லது வீடியோ போன்றவற்றுடன் விளக்க வேண்டும். போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயிகளின் கண்டுபிடிப்பானது அவரது சொந்த கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும். இதற்கு முன்னர் இத்தகைய கண்டுபிடிப்பு அல்லது தொழில்நுட்பம் வேறு எந்த போட்டியிலும் கலந்து கொண்டு பரிசு எதுவும் பெற்றிருக்க கூடாது. முதல் பரிசு ரூ.2.50 லட்சம், 2ம் பரிசு ரூ.1.50 லட்சம், மூன்றாம் பரிசு ரூ. 1 லட்சம் வழங்கப்படவுள்ளது. வேளாண்துறை அதிகாரிகள் கூறியதாவது: கண்டுபிடிக்கப்படும்இயந்திரம் அல்லது தொழில் நுடபம் வேறு ஒரு தனி நபருடைய அல்லது ஒரு கண்டுபிடிப்பின் அல்லது தயாரிப்பின் அசலாகவோ, சாயலாகவோ மேம்படுத்தப்பட்டதாகவோக இருக்கக் கூடாது. நவீன தொழில் நுட்பமானது அனைத்து விவசாயிகளும் எளிதில் கடைபிடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். விவசாயிகளின் சாகுபடி செலவுகளை குறைக்கக் கூடியாதகவும், அதிக விளைச்சலை தரக்கூடிய கருவியாகவும் இருக்க வேண்டும். அறிமுகப்படுத்தப்படும் இயந்திரம் அடிக்கடி பழுது ஏற்படாததாகவும், பழுது ஏற்பட்டால் உள்ளூரிலேயே பழுது நீக்கும் வகையில் இருத்தல் வேண்டும். வெற்றியாளர்களை அறிவிப்பதில் வேளாண்மை இயக்குநர் தலைமையிலான மாநில அளவிலான குழுவின் முடிவே இறுதியானது. இதற்காக டிச., இறுதி வரை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்றனர்.