பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் ரூ.36.59 கோடி இழப்பீட்டு தொகை
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 2024-25 ராபி பருவ பிரதமர் பயிர்க்காப்பீடு திட்டத்தில் நெற்பயிருக்கு பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டு தொகையாக ரூ.36 கோடியே 59 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. கடலாடி, கமுதி, பரமக்குடி, போகலுார் முதுகுளத்துார், நயினார்கோவில் (பகுதி) ஆகிய வட்டாரங்களில் 182 வருவாய் கிராமங்களுக்கு எஸ்.பி.ஐ., ஜி.ஐ.சி., நிறுவனம் பயிர்க் காப்பீட்டு பணியை செய்து வருகிறது. இந்நிறுவனம் 40 கிராமங்களுக்கு நெற்பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையாக ரூ.33 கோடியே 84 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு விடுவித்துள்ளனர்.இதே போல் ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி, ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, நயினார்கோவில் ஆகிய வட்டாரங்களில் 194 வருவாய் கிராமங்களுக்கு பஜாஜ் அலைன்ஸ் ஜி.ஐ.சி., நிறுவனம் பயிர்க் காப்பீட்டு பணியை செய்து வருகிறது. இந்நிறுவனம் 18 கிராமங்களுக்கு ரூ.2 கோடியே 75 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு விடுவித்துள்ளனர்.ஒரு வருவாய் கிராமத்திற்கு 4 வீதம் 1504 பயிர் அறுவடை பரிசோதனைகள் நடத்தப்பட்டது. புள்ளியியல் துறை மூலம் பெறப்படும் 4 இலக்க எதேச்சை (ரேண்டம்) எண் கொண்டு சர்வே எண்கள் தேர்வு செய்யப்பட்டு, விவசாயத்துறை, வருவாய்த்துறை, புள்ளியியல் துறை, பயிர்க்காப்பீட்டு நிறுவனம் ஆகியோரின் பிரதிநிதிகள் மற்றும் உரிய விவசாயியுடன் அறுவடை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.கடந்த 7 ஆண்டுகளாக கிராம மகசூலில் 5 ஆண்டுகள் அதிகபட்ச சராசரி மகசூலை உத்தரவாத மகசூலாக கணக்கிட்டு நடப்பு ஆண்டில் பெறப்பட்ட சராசரி மகசூலுடன் ஒப்பிடப்பட்டு ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டு சதவீதம் பெறப்படும்.இதனை பொறுத்தே பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை உரிய கிராமங்களுக்கு வழங்கப்படுகிறது என வேளாண் துறை இணை இயக்குநர் மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.